ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வாய்ஸ் அழைப்பு திட்டத்தை எதிர்த்து வோடஃபோன் வழக்கு
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச குரல் அழைப்பு திட்டத்தை (வாய்ஸ் கால்) எதிர்த்து வோடஃபோன் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்பு திட்டத்தை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வோடஃபோன் தொலைத் தொடர்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இலவச இணையதள வசதி, குரல் அழைப்பு வசதி ஆகியவற்றை அறிமுக சேவையாக கடந்த செடம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த இலவச சேவைகள் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் என்று தெரிவித்திருந்த நிலையில் அவற்றை வரும் மார்ச் வரை நீட்டித்துள்ளது.
இதுமட்டுமல்லாது, மார்ச் மாதத்துக்குப் பிறகு, லைஃப் டைம் சேவையாக குரல் அழைப்புகள் வழங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (டிராய்) நிர்ணயிக்கப்பட்ட நிர்ணய விலைக்கு மிகக் குறைவாக ஜியோ வழங்குவதால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி ஐகோர்ட்டில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வோடஃபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.
அத்துடன் 90 நாள்களுக்கு மட்டும் என்று அறிமுக சேவையை இறுதி வரை தொடர்வது விதிகளுக்கு முரணானது என்றும் வோடஃபோன் தன் மனுவில் தெரிவித்தது.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜியோ தரப்பில் ஆஜரான வக்கீல், ஜியோ வழங்கியுள்ள சேவைகளால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிவிப்புகள் டிராய்க்கு முரணானது என்றும் வோடஃபோன் தொடர்ந்த வழக்கு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் முற்றிலும் தகுதியில்லாதது என்றும் வாதிட்டார்.
அத்துடன் ஏர்டெல்- ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல முதலில் தொலைத்தொடர்பு விவகார தீர்ப்பாயத்திடம் வோடஃபோன் முறையிட வேண்டும் என்றார். வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications