சாய்பாபா பக்தர்களை ஒடுக்க களமிறங்கும் "நிர்வாண நாகா சாதுக்கள்"! அலகாபாத், ஹரித்வாரில் பதற்றம்!!
அலகாபாத்/ ஹரித்வார்: கடவுளின் அவதாரம் என்று கூறும் சாய்பாபா வழிபாட்டு முறையை ஒழிப்பதற்கான வியூகம் வகுக்க நிர்வாணமாக சாமியார்கள் என்கிற மிக முரட்டுத்தனமான நாகா சாதுக்கள், ஹரித்வார் மற்றும் அலகாபாத்தில் ஒன்று கூட இருக்கின்றனர்.
சீரடி சாய்பாபா ஒரு கடவுளின் அவதாரம் என்று கூறி அவரை லட்சக்கணக்கானோர் வழிபடுகின்றனர். ஆனால் துவாரகை பீட சங்கராச்சாரி ஸ்வாமி ஸ்வரூபானந்தாவோ, சாய்பாபா கடவுள் அவதாரம் கிடையாது. அவரை இந்துக்கள் வழிபடவும் கூடாது என்று கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. பல மாநிலங்களில் துவாரகை பீட சங்கராச்சாரி மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த சங்கராச்சாரிகளின் வழிகாட்டுதலில் இருக்கும் நாகா சாதுக்கள் என்ற நிர்வாண சாமியார்கள், சாய்பாபா பக்தர்களுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட இருக்கின்றனர்.

தற்கொலைப்படை
ஆதி சங்கரரால் இந்து சனாதான தர்மத்தைக் காப்பாற்ற தற்கொலைப்படையாக செயல்படக் கூடிய அகாடாக்கள் அமைக்கப்பட்டன. அதில் நாகா சாதுக்களின் அகாடா மிக முக்கியமான இன்று. இவர்கள்தான் நிர்வாணமாக மண்டையோடுகளுடனும் பயங்கர ஆயுதங்களுடனும் திரியக் கூடிய மிரட்டும் சாதுக்கள்

நிர்வாண சாதுக்கள்..
நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் நாகா சாதுக்கள் இருக்கின்றனர். இவர்கள் கும்பமேளா காலங்களில் கைகளில் ஆயுதம் ஏந்தி நிர்வாண ஊர்வலம் நடத்துவது வழக்கம். இவர்களை இந்திய அரசியல் சட்டத்தின் எந்த ஒரு பிரிவும் கட்டுப்படுத்தாது. இவர்களைப் பொறுத்தவரை கடவுளின் பிரதிநிதிகள்.

நூற்றுக்கணக்கில் மரணங்கள்
ஏற்கெனவே ஹரித்துவாரிலும் அலகாபாத்திலும் நாகா சாதுக்கள் தங்களுக்கு இடையே மோதிக் கொண்டு நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்ட போதும் கூட அரசுகள் எந்த ஒருநடவடிக்கையுமே எடுத்ததில்லை. இந்தப் பின்னணி கொண்ட நாகா சாதுக்கள், இப்போது சாய்பாபா பக்தர்களுக்கு எதிராக களமிறக்கப்படுகிறார்கள்.

சாய்பாபா வழிபாட்டுக்கு எதிராக
துவாரகை பீட சங்கராச்சாரிக்கு ஆதரவாக 'இந்து சனாதான தர்மத்தை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் சாய்பாபா வழிபாட்டு முறையை அடியோடு நிர்மூலமாக்குவதற்கான வியூகங்களை வகுக்க அலகாபாத் மற்றும் ஹரித்வார் நகரங்களில் கூடுமாறு நாகா சாதுக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான நடவடிக்கைகள்
இந்த கூட்டங்களில் சாய்பாபா வழிபாட்டு ஆலயங்களை இடித்து தள்ளுவது, சாய்பாபா பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சாத்தியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பதற்றம்
இதனால் புனித நகரங்களான அலகாபாத், ஹரித்துவார் ஆகியவை இப்போது பதற்றத்தில் இருக்கின்றன. அங்கு எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications