மேற்கு வங்காளத்தில் மீண்டும் ரணகளம்... பாஜகவினர் மீது போலீஸ் தடியடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் கலைத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே மேற்கு வங்காளத்தில், மோதல்கள் தொடங்கி விட்டன. அதே நேரம், தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 22 இடங்களை கைப்பற்றியது.
பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும், பாஜகவினர் தடையை மீறி ஆங்காங்கே வெற்றி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். இதனால், மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

யங்கர கலவரம்
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. கட்சி கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கலவரமாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொண்டனர்.

ஏழு நாள் கருப்பு தினம்
இந்த பயங்கர மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ஷங்கர் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழு நாள் கருப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தள்ளுமுள்ளு
இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் பாஜகவினர் தொடர்ந்து அரசியல் கொலை செய்யப்படுவதாக கூறி, கொல்கத்தா காவல் நிலையம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியினை போலீசார் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சட்டம் ஒழுங்கு மோசம்
இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications