என்னாச்சுங்க இந்த சுகோய்க்கு.. 3 வருடத்தில் 69 கோளாறு.. இதுவரை 7 விமானங்கள் காலி..!
டெல்லி: இந்தியாவின் பெருமைக்குரிய, அதை விட முக்கியமாக, முதன்மையான தாக்குதல் போர் விமானம் சுகோய் 30 ரக போர் விமானங்கள்தான். ரஷ்ய தயாரிப்பு. ஆனால் இது இந்தியாக்கு வந்தது முதலே தலைவலிதான். எத்தனை எத்தனை ரிப்பேர்கள். இதுவரை 7 விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.
1997ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது சுகோய். பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக இதை சேர்த்தனர். ஆனால் சேர்த்தது முதலே தகராறாகவே இருந்து வருகிறது.
அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சுகோய் விமானங்களின் அடையாளமாகவே மாறிப் போய் விட்டது. "வண்டி"யை எடுத்தாலே ரிப்பேர்தான். என்ஜின்கள்தான் இந்த விமானத்தின் மிகப் பெரிய துயரமாக உள்ளன. இந்தியாவின் பெருமைக்குரிய போர் விமானம் இப்படி தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருவது கவலை தருவதாக உள்ளது.
1997 முதல்
இந்தியாவில் 1997ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சுகோய் 30 எம்கே போர் விமானம், நமது விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அதன் மேம்படுத்தப்பட்ட விமானமானது 2000மாவது ஆண்டு சேர்க்கப்பட்டது.
என்ஜின் பிரச்சினை
சுகோய் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது முதலே சிக்கல்தான். குறிப்பாக என்ஜின் பழுது அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
7 விமானங்கள் சேதம்
இந்தியாவிடம் மொத்தமாக 240 சுகோய் விமானங்கள் உள்ளன. அதில் இதுவரை 7 விமானங்கள் இது போல விபத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. இது பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
போரில் சிக்காமல் சேதம்
இத்தனைக்கும் போரில் சிக்கி எந்த விமானமும் சேதமடைந்ததில்லை. விபத்துக்குள்ளாகி விழுந்துதான் இத்தனை சேதமும். இதுதான் கவலை தருகிறது. உலக அளவில் சிறந்த போர் விமானங்களில் ஒன்று சுகோய்.
கூட்டுத் தயாரிப்பு
உண்மையில் சுகோய் போர் விமானங்களை ரஷ்யாவிடம் உரிமம் பெற்று பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் இந்தியாவே தயாரிக்கிறது. குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் மட்டும் ரஷ்யாவிடமிருந்து நாம் பெறுகிறோம்.
3 வருடங்களில் 69 விபத்துகள்
கடந்த 3 வருடங்களில் மட்டும் சுகோய் போர் விமானங்கள் 69 விபத்துகளைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக என்ஜின் பிரச்சினை குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.
80 பேர் பலி
கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துக்கள் மூலம் இந்திய விமானப்படை 80 பேரை இழந்துள்ளது. தனிப்பட்ட முறையில் விமானப்படைக்கு மிகப் பெரிய இழப்பாகும் இது. காரணம், ஒவ்வொரு வீரரையும் தரமிக்கவராக உருவாக்க மிகப் பெரிய அளவில் செலவிடுகிறது விமானப்படை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேர்ட் பார்ட்ஸ் கிடைப்பதில்லை
சுகோய் விமானங்களின் பழுதை சரி செய்ய உரிய வசதிகள் நம்மிடம் போதி அளவில்லை. உதிரி பாகங்கள் போதிய அளவில் விரைவாக கிடைப்பதில்லை. பராமரிப்பும் சரியில்லை. இதனால்தான் அதிக அளவிலான விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது. பராமரிப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் ஒரு புது ஒப்பந்தம் போட்டுள்ளது இந்தியா. நிலைமை மேம்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.