ஸ்டாலினின் டெல்லி பயணம்: யாரை சந்தித்தார், என்ன பேசினார், என்ன திட்டம்? முழு விவரம்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் விவரம்:
பிரதமரை சந்தித்தபோது, கச்சத்தீவு மீன்பிடி உரிமை பிரச்னை, யுக்ரேனில் மருத்துவ படிப்பு விடுபட்டு போய் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இங்கேயே படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும், மேகேதாட்டுவில் தடுப்பணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது, நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

குறிப்பாக நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டமியற்றிய பிறகும் அது தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் வழங்காமலும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமலும் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். அது குறித்து பிரதமரிடம் பேசினேன்.
முன்னதாக, டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர்.
இரவில் வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். நேற்று இரவு அங்கு அவர் தங்கினார். இன்று காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர். அவர்களுடன் தி.மு.க. அலுவலக திறப்பு விழா தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடி-மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
குறிப்பாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












Click it and Unblock the Notifications