இந்தியாவில் பரவும் சண்டிபுரா வைரஸ்! குழந்தைகளிடையே மோசமான பாதிப்பு! கோமா கூட ஏற்படும்! அறிகுறி என்ன?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் இப்போது வரை அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதென்ன சண்டிபுரா வைரஸ்.. இது எப்படிப் பரவுகிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.. இதற்கான சிகிச்சை என்ன என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு 12 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குஜராத் அமைச்சர்: இது தொடர்பாகக் குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், "சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு உயிரிழப்பு அருகே உள்ள வேறு மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.. இவர்களுக்கு சண்டிபுரா வைரஸ் தானா என்பதை உறுதி செய்ய மாதிரிகளை புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
சண்டிபுரா வைரஸ்: சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.. நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும். இது முதன்முதலில் 1965இல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இது சண்டிபுரா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் அதிகம் குழந்தைகளிடையே தான் பரவும்.
இந்த நோய் வெக்டார்- பாதிக்கப்பட்ட ஒரு வகையான மணல் பூச்சி கடிப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது முக்கியமாக 9 மாதங்கள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைப் பாதிக்கிறது. இது கிராமப் புறங்களில் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல், வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
பரவாது: சண்டிபுரா வைரஸ் ஒரு தீவிர நோய்க்கிருமியாகும்.. இருப்பினும், கொரோனா போல இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது. இதற்குக் குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் இல்லை. எனவே, எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெறுகிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

அறிகுறிகள்: திடீரென காய்ச்சல் அதிகரிக்கும்.. கடுமையான தலைவலி ஏற்படும். அடிக்கடி வாந்தி வரலாம். வலிப்பு ஒரு முக்கிய அறிகுறியாகும். குழப்பம், எரிச்சல் மற்றும் நினைவு கூட தப்பும். சில நேரங்களில் கோமாவுக்கு கூட தள்ளப்பட்டு மரணம் கூட ஏற்படலாம். சண்டிபுரா வைரஸ் sandflies எனப்படும் மணல் ஈக்கள் கடிப்பதால் தான் அதிகம் பரவுகிறது. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பாம்பு கடித்தால் என்ன செய்யலாம்! என்ன செய்ய கூடாது? சினிமாவை பார்த்து இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க
சிகிச்சை: சண்டிபுரா வைரஸ் தொற்றுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே முதலில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அதுவே முதன்மையானது. கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். உடலில் நீர்ச் சத்து குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக வாந்தி எடுத்தால் நீர்ச் சத்து குறையும். எனவே, நீர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் காய்ச்சலைக் குறைக்கவும், வலிப்பு ஏற்படுவதை நிறுத்தவும் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். கடுமையான நரம்பியல் அறிகுறிகளில் இருந்தால் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications