ஏம்ப்பா எங்கப்பா அந்த ரேகா.. ஒரு ஓட்டு போச்சே.. பரிதவித்த மோடி அரசு!
டெல்லி: ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய அரசு அதை நிறைவேற்றத் தேவையான வாக்குகளை சேகரிக்க பலமுனைகளிலும் முயன்றது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோரின் ஆதரவையும் அது நாடியுள்ளது.
இந்த இருவருமே ராஜ்யசபாவுக்கு ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறைதான் வருவது வழக்கம். அப்படி ஒரு டிமிக்கி பார்ட்டிகள். இவர்கள் ராஜ்யசபாவுக்கு வந்தால்தான் செய்தியே. இப்படிப்பட்ட நிலையில் இன்று அவர்களின் வாக்குகளும் மோடி அரசுக்கு முக்கியமாக தேவைப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினை பாஜக தலைவர்கள் பிடித்துப் பேசி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர்களால் கடைசி வரை நடிகை ரேகாவைப் பிடிக்க முடியவில்லையாம். இதனால் அவரது ஆதரவைப் பெறுவதில் பெரும் சிக்கல் இருந்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இன்று ராஜ்யசபாவிலும் கூட ரேகா எங்கிருப்பார். எப்படி அவரைத் தொடர்பு கொள்வது என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சில சீனியர் அமைச்சர்கள் உதவி கோரியதாகவும் கூறப்பட்டது.
ராஜ்யசபாவில் பாஜக மைனாரிட்டியாக உள்ளது. எனவே ஒவ்வொரு ஓட்டும் அக்கட்சிக்கு முக்கியம் என்பதால்தான் இப்படி வராத சச்சின், ரேகாவைக் கூட விடாமல் விரட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications