ஜாகிர் நாயக் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்? - திக்விஜய் சிங்
டெல்லி: இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மகராஷ்டிரா அரசும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, ஜாகிர் நாயக்கின் பேச்சுகளை ஆய்வு செய்யுமாறு வங்காளதேசம் இந்தியாவை கேட்டுக்கொண்டது. அதன்பேரில் தொடர்ந்து இந்தியா விசாரித்து வருகிறது. இதற்கிடையே ஜாகீர் நாயக் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இதற்கிடையே, 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த ஒருநிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்து கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றிய விவகாரமும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய திக்விஜய் சிங் ஜாகிர் நாயக்கை அமைதிக்கான தூதர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங், "ஜாகிர் நாயக் இந்தியாவில் அமைதிக்கான கருத்துக்களை பரப்பினார்," என்று மீண்டும் கூறியுள்ளார். ஜாகிர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மராட்டிய அரசும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications