சிறு குறு தொழிலில் உ.பி.தான் டாப்.. முதல்வர் யோகியின் அதிரடி பேச்சு.. ஆமா, அதென்ன அப்பளம்?.. சபாஷ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சிறு குறு தொழில்கள் சர்வதேச அளவில் பேமஸாகியுள்ளதால் தற்போது ஒவ்வொரு மாவட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற தொடங்கியுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், ஹாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்தார். அதில் பேசிய அவர், "கடந்த ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பெருமைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தனிச்சிறப்பையும் கவனித்து அந்த தனிச்சிறப்புகளை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோம்.

உதாரணமாக ஹாபூரின் அப்பளம் மிகவும் பேமஸானது. இந்த அப்பளத்தை சர்வதேச சந்தைக்கு நாங்கள் கொண்டு சென்றோம். அப்பள உற்பத்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தோம். எனவே இந்த அப்பளம் இந்தியா முழுமைக்கும் பேமஸானது. தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அப்பளத்தை தேடி தேடி வாங்குகின்றனர். எனவே அதிக அளவில் அப்பளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இது ஹாபூரில் மக்களுக்கு மறுவாழ்வை அளித்திருக்கிறது. ஆக பாஜக அரசு மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பாஜக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், வீடுகள், கழிப்பறைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முக்கிய துறைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கல்வி துறைதான். பள்ளி கல்வி துறைக்கு மட்டும் சுமார் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். அதேபோல மாநிலத்தில் உள்ள 1753 பள்ளிகள் PM SHRI திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட இருக்கின்றன. கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், கழிவறைகள் என பல்வேறு புதிய கட்டுமானங்களுக்கு இந்த திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ரூ.1010 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது முதல் கட்டமாக ரூ.500 கோடியும் இரண்டாவது கட்டமாக ரூ.510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனா தொற்று காலத்திற்கு பின் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனை அதிகரிக்கவும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக உத்தரப் பிரதேச அரசு எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி, அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் உழைத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications