10 நாட்கள்.. 248 மணி நேரம்.. தண்ணிகூட இல்ல.. உயிர்பிழைத்த 17 வயது சிறுமி.. துரத்தும் துருக்கி துயர்
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் கடும் தொய்வு ஏற்பட்டிருந்தது. இருப்பினும் மீட்பு படையினரின் விடா முயற்சியால் பலர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
அங்காரா: துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் இடிபாடுகளிலிருந்து இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உள்ளூர் செய்தி ஊடகமான Takvim உறுதி செய்திருக்கிறது.
கடந்த 6ம் தேதி அதிகாலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இதனையடுத்து மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்கிற விஷயம் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர்தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இப்படியாக விஷயம் வெளிவந்த நிலையில், மீட்புப்படைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்தன.
ஆனால் மோசமான வானிலை காரணமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காசியான்டெப், கஹ்ரமன்மரஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்திற்கு பின்னர் மீட்பு படைகள் புறப்பட்டன. ஆனால் அங்கு சென்று பார்த்த பின்னர்தான் மீட்பு படைகளின் எண்ணிக்கை போதாது என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் விஷயம் உலக நாடுகளுக்கு தெரியவர, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மீட்புப்படைகளை அனுப்ப முன்வந்தது.

மீட்புப்பணி
இந்தியாவிலிருந்து சுமார் 7 விமானங்கள் நிவாரணப்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்பு குழுவினருடன் துருக்கிக்கு பயணித்தது. மீட்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மாலை வேளையில் அதாவது முதல் நிலநடுக்கம் பதிவாகி 12 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மீதமிருந்த கட்டிடங்களையும் சரித்தது. எனவே மீட்பு பணியில் கடும் தொய்வு ஏற்ட்டது. இருபினும் விடாமல் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் நூற்றுக்கணக்கான மக்களை இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டனர்.

உயிரிழப்பு
ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது வரை சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இந்த நிலநடுக்கம் கருதப்படுகிறது. உயிரிழப்பு ஒருபுறம் எனில் மறுபுறம் படுகாயமடைந்தவர்கள் இதேபோல ஆயிரக்கணக்கில் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலநடுக்கத்தால் ரூ.69 லட்சம் கோடி வரை துருக்கிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் கடும் பனி பெய்து வருவதால் மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இருப்பினும் இதில் போதுமான இடம் இல்லாததால் பலர் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர்.

உயிர் பிழைத்தோர்
தற்போது இந்த பேரழிவில் ஆறுதலாக இருப்பது ஒரே விஷயம்தான். அது உயிருடன் மீட்கப்படுவர்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு இளம்பெண் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். நிலநடுக்கம் ஏற்பட்டு 8 நாட்கள் (173 மணி நேரம்) ஆன நிலையில் இப்பெண் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல 13 வயது சிறுமி ஒருவர் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 183 மணி நேரத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயது பெண்மணி ஒருவரும் இதேபோல இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

10 நாட்களுக்கு பிறகு
இந்நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 10 நாட்களுக்கு(248 மணி நேரம்) பிறகு 17 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கஹ்ராமன்மராஸ் மகாணத்தின் கயாபாசி மாவட்டத்தில் உள்ள அட்டபே அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளிலிருந்து இப்பெண் மீட்கப்பட்டுள்ளார். இப்பெண்ணின் பெயர் அலியான எனவும், தற்போது இவர் நலமுடன் இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications