ஹெலிகாப்டர் சத்தம் கேட்டதும்.. குபுகுபுவென இனப்பெருக்கம் செய்த 3000 முதலைகள்! ஆஸ்திரேலியாவில் திடுக்
கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்ள முதலை பண்ணையில், ஹெலிகாப்டர் சத்தத்தை தவறாக புரிந்துகொண்ட ஆயிரக்கணக்கான முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
முதலைகள் இந்த உலகத்தின் மிகவும் ஆச்சரியமான உயிரினங்களாகும். உலகம் உருவானதிலிருந்து சில வகை உயிரினங்கள் தங்களின் உடலமைப்புகளை மாற்றிக்கொண்டதே கிடையாது. அது எல்லா காலங்களுக்கும் பொருந்தும் உடலமைப்பை பெற்றிருப்பதே இதற்கு காரணமாகும். அந்த வகையில், முதலையும் தற்போது வரை பெரியதாக எந்த பரிணாம வளர்ச்சியையும் கண்டிருக்கவில்லை. டைனோசர் காலத்திலிருந்தே இது இதே தோற்றத்தைதான் கொண்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த முதலைகள் கூட்டம் ஒன்று ஆயிரக்கணக்கில் திடீரென இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமாக முதலைகள் மழைக்காலத்தில்தான் இனச்சேர்க்கையில் ஈடுபடும். ஆனால் ஆஸ்திரேலியாவில் மழைக்காலம் இன்னும் தொடங்கவில்லை. இப்படி இருக்கையில் திடீரென இவைகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் ராக்ஹாம்ப்டன் பகுதியில் 'கூரான' முதலை பண்ணை அமைந்திருக்கிறது. இந்த பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்த பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகாப்டர் பறந்து சென்றிருக்கிறது. அவ்வளவுதான் கீழே உள்ள முதலைகள் என்ன நினைத்ததோ தெரியவில்லை திடீரென இனச்சேர்க்கையில் ஈடுபட தொடங்கிவிட்டன. இதை பார்த்த பண்ணை உரிமையாளர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது மனிதர்களை போல எல்லா உயிரினங்களும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் இனச்சேர்க்கையில் ஈடுபடாது. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு காலம் இருக்கும். அதுபோல முதலைகளுக்கு மேலே குறிப்பிட்டதை மாதிரி, மழைக்காலம்தான் இனப்பெருக்க காலமாகும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தபோது அதிலிருந்து வந்த அதிர்வலைகள் முதலைகளுக்கு இடியை நினைவுபடுத்தியிருக்கலாம். எனவே மழைக்காலம் வந்துவிட்டது என உடனடியாக இனச்சேர்க்கையில் ஈடுபட தொடங்கியிருக்கலாம்.
அப்படி இல்லையெனில், தன்னுடைய ஏரியாவுக்குள் மற்றொரு முதலை வந்துவிட்டது என்கிற உணர்வை ஹெலிகாப்டர் சத்தம் ஏற்படுத்தியிருக்கலாம். எனவேதான் உடனடியாக இந்த முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது சிங்கப்பூர் ஆயுத படைகள் ஷோல்வாட்டர் வளைகுடாவில் ஆஸ்திரேலிய ராணுவத்துடன் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது. எனவேதான் இந்த பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்திருக்கிறது. இந்த ஷோல்வாட்டர் வளைகுடாவையொட்டிதான் முதலை பண்ணையும் அமைந்திருக்கிறது. இப்படி அடிக்கடி ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் பறப்பது இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பழகிவிட்டது. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை முதலைகள் பருவ காலத்திற்கு முன்னரே இப்படி இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதுதான் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications