சீனாவில் கடும் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்
பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளனர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டெர் அளவில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜின்ஷியாங் மாகாணத்தில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் குமா கவுன்ட்டி அருகில் உள்ள ஹோடன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார். இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். நிலநடுக்கத்திற்கு இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 20பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமா கவுன்ட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக விளங்கும் இந்தப்பகுதியில் இந்த வாரத்தில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. சீனாவில் இந்த வருடத்தில் மட்டும் 8 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.