ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம்
ஜெருசலேம்: ஜெருசலேமில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது.
Recommended Video
இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போரின் முடிவில் இருந்தே தொடங்கிவிட்டது. அங்கு பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதே இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்துவிட்டது. இரண்டு தரப்பும் இந்த நிலப்பகுதியை தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்று கூறி மோதி வருகின்றன.
இரண்டாம் உலக போருக்கு பின் யூதர்களுக்கான தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தீவிரத்தில், பாலஸ்தீனம் துண்டாடப்பட்டது. யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பாலஸ்தீனம் துண்டாடப்பட்டது. அப்போது தொடங்கிய மண்ணிற்கான மோதல், உரிமைக்கான சண்டை இப்போது வரை நீண்டு கொண்டு இருக்கிறது.

ஆக்கிரமிப்பு
பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த இஸ்ரேல், ஒவ்வொரு வருடமும் பாலஸ்தீன நிலத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்தது. அங்கிருந்த இஸ்லாமியர்களை விரட்டி அடித்து, கொடுமைப்படுத்தி, யூதர்களை இஸ்ரேல் குடியேற்றியது. இந்த மோதலின் மையப்பகுதியாக இருக்கும் ஜெருசலேமை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதுதான் இஸ்ரேல், பாலத்தீனம் இடையில் இருக்கும் மோதலுக்கு முக்கிய காரணம்.

இரண்டு
இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. இரண்டுமே ஜெருசலேமை புனித பூமியாக பார்க்கிறது. இதில் ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்று அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்தது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, வெஸ்ட் பேங்க் பகுதிகளை உரிமை கொண்டாடுவது யார் என்றும் மோதல் நிலவி வருகிறது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
இதில் காசாவை பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்து, இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக போராடி வருகிறது. அதே சமயம் ஹமாஸ் படையை இஸ்ரேல் தீவிரவாத குழு என்றும் குற்றஞ்சாட்டி வருகிறது. பல ஆண்டுகளாக இரண்டு தரப்புக்கும் காசாவிலும், வெஸ்ட் பேங்கிலும் மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது மீண்டும் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என்ன காரணம்
இப்போது மோதல் வெடிக்க இதுதான் காரணம்,
ஜெருசலேமில் இருக்கும் அல் அக்சா மசூதிக்கு அருகே ஜெருசலேம் நாள் பேரணியை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருந்தது. இது ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு இஸ்லாமியர்கள் தினமும் கூடி தொழுகை நடத்தி வந்தனர். ஜெருசலேமின் ஓல்ட் சிட்டியை 1967 பிடித்ததன் நினைவாக இஸ்ரேல் இந்த பேரணியை அங்கு நடத்த திட்டமிட்டு இருந்தது.

ரெய்டு
இதில் கலவரம் வெடிக்க வாய்ப்பு இருந்ததாக கூறி ஜெருசலேமில் இருக்கும் அல் அக்சா மசூதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ரெய்டு ஒன்றில் அங்கிருந்த இஸ்லாமியர்கள் 200 பேருக்கும் மேலாக காயம் அடைந்தனர். இஸ்ரேல் யூதர்கள் நடத்த வேண்டிய பேரணியில் இசுலாமியர்கள் கற்களை வைத்து தாக்க திட்டமிட்டதாக கூறி, இந்த மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவமும், போலீசும் தாக்குதல் நடத்தியது.

இஸ்லாமியர்கள்
உள்ளே கற்கள் இருந்ததாக கூறி இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்தான் தற்போது மோதலுக்கு காரணம் ஆகி உள்ளது. இந்த மசூதியை பலஸ்தீன மக்கள், புனித தலமாக கருதி உரிமை கொண்டாடும் நிலையில், இந்த மசூதியை சுற்றி உள்ள வெஸ்ட் வால் என்ற சுவரை தங்கள் புனித தலமாக யூதர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியோ மிகவும் சென்ஸ்ட்டிவான இடம்.

மோதல்
இதுவும் கூட இந்த தாக்குதல் தற்போது பெரிய பிரச்சனையாக காரணமாக மாறியுள்ளது. இங்கு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் போராளி குழுவும் பதில் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் சிறிய ரக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் 25 ஹமாஸ் போராளிகள், பாலஸ்தீனர்கள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காசா
ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இதை அதிகம் இருக்கும் என்கிறார்கள். ஜெருசலேமில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் விடாமல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. காசாவில் கடந்த இரண்டு நாட்களாக சிறிய சிறிய அளவில் நடந்து வந்த தாக்குதல் தற்போது ராக்கெட் தாக்குதல்களாக நடத்தப்பட்டு வருவதால் பாலஸ்தீனத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமைதி நிலவி வந்த நிலையில் ஜெருசலேம் மீண்டும் பற்றி எரிய தொடங்கி உள்ளது. அதிலும் இஸ்ரேல் இந்த முறை மிக உக்கிரமாக தாக்குதல் நடத்துவதால் பாலஸ்தீன மக்கள் கடும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications