"விழுந்த பேரிடி.." மாலத்தீவை மொத்தமாக புறக்கணித்த இந்தியர்கள்.. ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய இழப்பா
மாலே: இந்தியா மாலத்தீவு மோதல் காரணமாக மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இது மாலத்தீவுக்குப் பெரிய அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. மாலத்தீவில் புதிய அதிபராகப் பதவியேற்கும் நபர் முதலில் எப்போதும் இந்தியாவுக்குத் தான் வருவார். அந்தளவுக்கு நல்லுறவு இருந்தது.

இந்தியப் பெருங்கடலில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதால் மாலத்தீவுடன் நல்லுறவை வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்பியது. இதன் காரணமாக மாலத்தீவுக்கு உதவும் வகையில் பல உள்கட்டமைப்பு திட்டங்களில் இந்தியா முதலீடு செய்திருந்தது.
மாலத்தீவு: ஆனால், இவை அனைத்தும் மாலத்தீவு அதிபராக முய்ஸு பதவியேற்ற உடன் மாறியது. கடந்தாண்டு நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் முய்ஸு வெற்றி பெற்றிருந்தார். சீனா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர், பிரச்சாரத்தின் போதே இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தார். அதேபோல தேர்தலில் வென்ற உடன் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க அவரது அமைச்சரவை சகாகக்கள் செய்த ஒரு காரியம் இரு நாட்டு உறவை மோசமாகப் பாதித்தது. அதாவது லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்கே எடுத்த போட்டோக்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு மிக மோசமான கருத்துகளை அந்த அமைச்சர்கள் கூறி இருந்தனர். அரசு பொறுப்பில் இருப்போர் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது சர்ச்சையானது. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகவே அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புறக்கணித்த இந்தியர்கள்: இருப்பினும், அவர்களின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்த இந்தியர்கள், மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதைப் புறக்கணிக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். மேலும், பலரும் மாலத்தீவுக்கு புக் செய்த டிக்கெட்களை ரத்தும் செய்தனர். சுற்றுலாவை முழுமையாக நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இது பெரிய அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பான டேட்டா வெளியாகியுள்ளது.
அதில் ஒரே ஆண்டில் மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மாலத்தீவுக்கு வரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகள் காட்டுகிறது. இந்தியா மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
கடும் சரிவு: இது தொடர்பான தகவல்களை மாலத்தீவு சுற்றுலாத் துறை பகிர்ந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் 4ஆம் தேதி வரை 41,054 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்குச் சென்றுள்ளனர். அதேநேரம் இந்தாண்டு மார்ச் 2ஆம் தேதி வரை மாலத்தீவு சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 27,224ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13,830 குறைவாகும்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மாலத்தீவுக்கு வந்த மொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் 10 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த முறை அதன் பங்கு 6% குறைந்துள்ள நிலையில், இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இதேபோல இருந்தால் இந்தியாவில் இருந்து மாலத்தீவு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications