"மன்னித்து விடுங்கள்.." இந்தியர்கள் எடுத்த முடிவால் மாலத்தீவுக்கு விழுந்த பெரிய அடி! Ex அதிபர் பரபர
மாலே: இந்தியா மாலத்தீவு மோதல் காரணமாக அந்நாட்டுச் சுற்றுலாவைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத சில பரபர கருத்துகளைக் கூறி இருக்கிறார்.
இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு சமீப காலமாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதுவும் சில மாதங்களுக்கு முன்பு அது மிக மோசமான நிலையை அடையவே, மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற இந்தியர்கள் அழைப்பு விடுத்தனர்.

அதை ஏற்றுப் பலரும் தங்கள் மாலத்தீவு சுற்றுலா டிக்கெட்களை கேன்சலும் செய்தனர். முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இது பெரும் அடியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
முகமது நஷீத்: இதற்கிடையே மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்தியர்கள் சுற்றுலாவைப் புறக்கணித்தது தொடர்பாக சில பரபர கருத்துகளைக் கூறி இருக்கிறார். மாலத்தீவுக்கு வருவதை இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்த பிறகு மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரிய அடி விழுந்துள்ளதாக மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்தார். தற்போது இந்தியாவில் இருக்கும் முன்னாள் அதிபர் நஷீத், மாலத்தீவு மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது (இந்தியர்கள் சுற்றுலாவைப் புறக்கணித்தது) மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது, நான் உண்மையில் இங்கே இந்தியாவில் இருக்கிறேன். இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்கள் வருந்துகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன். இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர வேண்டும்.. விடுமுறை நாட்களைக் கொண்டாட அங்கே வாருங்கள்.. நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.
பேச்சுவார்த்தை: இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் இந்தியா எப்போதுமே பொறுப்பாகவே இருந்துள்ளது. அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு ராஜதந்திர விவாதத்தை இந்தியா முன்மொழிந்தது. மாலத்தீவு அதிபர், இந்திய ராணுவ வீரர்களை வெளியேறச் சொன்னபோது, இந்தியா என்ன செய்தது தெரியுமா? இந்தியா மற்ற நாடுகளைப் போல மாலத்தீவுக்கு அழுத்தும் கொடுக்கவில்லை. மாறாக மாலத்தீவு அரசிடம் இது குறித்து விவாதிக்க முன்வந்தார்கள்.
மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தானது பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. அது உபகரணங்களை வாங்கும் சிறிய அக்ரிமென்ட் தான்.. முய்ஸு சில உபகரணங்களை, முக்கியமாக ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வாங்க விரும்பி இருக்கிறார். அதற்கான ஒப்பந்தம் தான் அது. ஆனால், மாலத்தீவுக்கு இன்னும் கூடுதலாகக் கண்ணீர்ப்புகை மற்றும் அதிக ரப்பர் தோட்டாக்கள் தேவை என்று அரசு நினைத்ததே மிகவும் துரதிர்ஷ்டவசமானது. துப்பாக்கிகளை வைத்தே ஆட்சியை நடத்திவிட முடியாது" என்றார்.
இந்தியா நிலைப்பாடு: இந்திய மாலத்தீவு இடையேயான மோதல் குறித்து சமீபத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "நாடுகளுக்கு இடையே தவறான புரிதல்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். எந்த சிக்கலையும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியும் என நம்புகிறேன். நாம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும், சில நேரங்களில் மக்களுக்கு முழுமையான புரிதல் கூட இருக்காது, சில நேரங்களில் மற்றவர்கள் சொல்வதில் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே, நாம் புரிய வைக்க வேண்டும்" என்றார்.
புதிய அதிபர்: மாலத்தீவு அதிபராகச் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு வந்தது முதலே இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதித்துள்ளது. ஏற்கனவே அவர் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து கிளம்பச் சொல்லி இருந்தார். அதேபோல மாலதீவுகளில் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியாவை அனுமதித்த ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்தது.
மேலும், மாலத்தீவில் யார் அதிபராகப் பொறுப்பேற்றாலும் முதலில் இந்தியாவுக்குத் தான் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார்கள், ஆனால், அந்த பாரம்பரியத்தை கடைப்பிடிக்காத முய்ஸு, அதற்குப் பதிலாகத் துருக்கி மற்றும் பின்னர் சீனாவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications