இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு
மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்ரேல் நாட்டில் மெரோன் நகரில் லாகோம்-போமர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்
இஸ்ரேலின் வடகிழக்கில் உள்ள மெரோன் மலைகளின் கீழ் ஒன்று கூடும் பாரம்பரிய யூத மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பிரார்த்தனை செய்து ஆடிப்பாடி இந்த விழாவை கொண்டாடுவார்கள்.

திருவிழா கொண்டாட்டம்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த விழா ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து விட்டதால் இந்த ஆண்டுக்கான லாகோம்-போமர் திருவிழா மெரோன் நகரில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

44 பக்தர்கள் பலி
கொரோனா தொற்றுக்கு பிறகு நாட்டில் கொண்டாடும் மிகப்பெரிய விழா என்பதால் ஏராளமானோர் நெருப்பு திருவிழாவில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி மூச்சுத் திணறி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரணம் என்ன?
படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. மக்கள் அமர்ந்திருந்த ஸ்டேடியம் ஒரு பகுதி இடிந்ததால் பதற்றம் அடைந்து மக்கள் ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அங்கு வழக்கத்தை விட மூன்று மடங்கு மக்கள் அதிகமாக இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் இரங்கல்
இதனை பெரும் பேரழிவு என்று வர்ணித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ''காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கூறினார். காயமடைந்த பலர் அபாயகட்டத்தில் உள்ளதால் இறப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications