மியான்மர் அதிபர் தெயின் சீனை நாளை சந்திக்கிறார் ஆங்சான் சூகி
யாங்கூன்: மியான்மர் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவி ஆங்சான் சூகி அந்நாட்டு அதிபர் தெயின் சீனை நாளை சந்தித்து பேச உள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் கடந்த மாதம் 8-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள ராணுவ தலைமையின் கீழ் செயல்படும் யு.எஸ்.டி. பி. என்னும் ஒற்றுமை கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். மியான்மரில் புதிய பாராளுமன்றம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவியான ஆங்சான் சூகி நாளை மியான்மர் அதிபர் தெயின் சீனை சந்தித்து பேசுகிறார். இதேபோல் 3 முக்கிய மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹெலாங்கையும் அவர் சந்திக்கிறார்.
இதுபற்றி மியான்மர் அதிபர் அலுவலக மூத்த அதிகாரி ஷா ஹாய் கூறுகையில், ஆங்சான் சூகி அதிபரை புதன்கிழமை காலை அவருடைய அலுவலகத்தில் சந்திப்பார். அன்று பிற்பகலில் ராணுவ தளபதியையும் அவர் சந்திக்கிறார் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆங்சான் சூகி அதிபரையும், ராணுவத் தலைமை தளபதியையும் சந்தித்து பேச இருப்பதை தேசிய ஜனநாயக லீக் கட்சியின் மூத்த தலைவர் வின் ஹெயினும் உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது எதுபற்றி பேசப்படும் என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
எனினும், பிப்ரவரி மாதம் அமையவிருக்கும் புதிய அரசாங்கம், ராணுவத் தலைமையுடன் இணைந்து தேசிய அளவில் ஒற்றுமையுடன் சுமுகமாக பணியாற்ற ஆதரவு கேட்கவே ஆங்சான் சூகியின் இந்த சந்திப்பு நடக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் பாராளுமன்ற மேல்-சபை மற்றும் கீழ் சபையில் 25 சதவீத இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் முக்கிய எதிர்க்கட்சியாக ராணுவத்தைச் சேர்ந்தவர்களே எம்.பி.க்களாக நியமிக்கப்படுவார்கள். மேலும், தற்போது வகுக்கப்பட்டு உள்ள ராணுவ வரைவு சட்டப்படி முன்னாள் அரசியல் கைதியான ஆங்சான் சூகியை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications