கடும் வறட்சி.. கட்டுக்கடங்காத காட்டுத் தீ.. 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு!
Recommended Video
கேன்பெரா: கடுமையான காட்டுத் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது.
வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர்.

தீக்கிரையாகும் விலங்குகள்
ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன.

வெளியான போட்டோக்கள்
20க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதை பதைக்க வைத்தது.

அதிகளவு நீரை குடிப்பதால்
இந்நிலையில் ஏபிஒய் பகுதியில் உள்ள ஒட்டங்கள் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு நீரை குடித்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்ல முடிவு
இதனால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிக்க அப்பகுதியில் உள்ள பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அப்பகுதி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

சுட்டுக்கொல்ல உத்தரவு
இதற்காக கைதேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர்களை கொண்டு ஹெலிகாப்டர்களில் இருந்தப்படி ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

5 நாட்கள் துப்பாக்கிச்சூடு
ஒட்டகங்களை சுட்டுக்கொல்லும் பணி இன்று தொடங்குகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தாயிரம் ஒட்டகங்கள் கொல்லப்படவுள்ளன.

வெப்பமே காரணம்
வறட்சி மட்டுமின்றி காட்டுத் தீயாலும் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ள ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் காரணமாகவே ஒட்டகங்கள் அதிகளவு நீரை குடிப்பதும் தெரியவந்துள்ளது.

ஆர்வலர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே காட்டுத் தீயால் 48 கோடி வன விலங்குகள் உயிரிழந்த நிலையில் தற்போது, அதிக நீரை குடிப்பதாக கூறி பத்தாயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications