”துடிப்பு” நின்று போன இதயத்தை துடிக்க வைத்து இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்திவந்தனர்.
ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இதய ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஒரு புதிய செயல்பாட்டினை கண்டறிந்துள்ளனர்.
துடிப்பு நின்று போன இதயம்:
அதன் மூலமாக துடிப்பது நின்று 20 நிமிடத்திற்கு பிறகும் தானம் செய்யப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக மற்றொருவருக்கு பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று பேருக்கு சிகிச்சை:
இதுவரை இந்த செயல்பாட்டின் உதவியால் மூன்று பேருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்களில் இருவர் நலமுடன் இருப்பதாகவும், மூன்றாவது நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்குதான் முதன்முதலில்:
இந்த புதிய சாதனை செயல்பாடு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் குமுத் டித்தால், "உலகிலேயே மூவருக்கு தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்படும் இதயம்:
இந்த முறையில் தானம் செய்யப்பட்ட இதயம் "ஹார்ட் இன் எ பாக்ஸ்" என்னும் ஒரு சிறிய இயந்திரத்தினுள் கதகதப்பான சூழலில், பாதுகாப்பான திரவத்தில் வைக்கப்படுகிறது.
நோயாளிகளுக்கு உதவும் சிகிச்சை:
இவ்வகையில் பராமரிக்கப்படும் இதயங்கள் பாதுகாப்பாக உள்ளன என்பது மருத்துவர்களுக்கு உறுதியாக தெரிவதால், நோயாளிகளுக்கு இம்முறை உதவியாக உள்ளது.
5 ஆண்டுகளில் அதிகரிக்கும்:
இன்னும் 5 ஆண்டுகளில் நாம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் இதயத்தை பாதுகாக்கும் முறையை பின்பற்ற துவங்கியிருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.