"ஒரு சின்ன சிரிப்பு.." விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! ஆத்திரத்தில் 7 பேரை சுட்டு கொன்ற சைக்கோ
சின்ன விளையாட்டு விபரீதமானதால் 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரேசிலியா: விளையாட்டில் தோற்ற நபரைப் பார்த்துச் சிரித்ததால், அந்த விளையாட்டே விபரீதமாகிவிட்டது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
பெரும்பாலும் விளையாட்டுகளில் சிறு சிறு மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அது பெரும்பாலும் வாக்குவாதத்தில் முடிந்துவிடும். சில மோசமான நேரங்களில் மட்டும் கைகலப்பில் முடியும்.
ஆனால், இங்கு விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது. விளையாட்டில் தோற்ற நபரைப் பார்த்துச் சிரித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், குழந்தை உட்பட பலரை வரிசையாகக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

பிரேசில்
பிரேசில் நாட்டில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பில்லியர்ட்ஸ் அரங்கில் தான் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லியர்ட்ஸ் விளையாட்டில் அந்த இருவர் தோற்ற நிலையில், அதைப் பார்த்து இவர்கள் சிரித்ததாகவும் இதன் காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஷாக் சம்பவம்
பிரேசிலின் மாட்டோ க்ரோசோவில் உள்ள சினோப் சிட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு பில்லியர்ட்ஸ் விளையாட்டில் அந்த ஆண்கள் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோற்றுள்ளனர். அதைப் பார்த்துச் சிரித்தாலேயே இருவரும் சேர்ந்து அவர்களைக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், சம்பந்தப்பட்டோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா மற்றும் எஸேகியாஸ் சௌசா ரிபேரோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஒலிவேரா முதலில் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். இதன் பிறகு மீண்டும் எஸேக்வியாஸுடன் வந்து அதே ஆளுடன் மோதியுள்ளார். அதிலும் தோற்றுப் போகவே, அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒலிவேரா, தனது வண்டியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னை பார்த்துச் சிரித்தவர்களைச் சுடத் தொடங்கியுள்ளார்.

7 பேர் பலி
எஸேக்யாசும் அவருடன் இணைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். தங்களைப் பார்த்துச் சிரித்தவர்களை நோக்கி மட்டுமின்றி, அனைவரையும் நோக்கி தாறுமாறாகச் சுட்டுள்ளனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏழாவது நபர் படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரும் அங்குச் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதன் மூலம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்தது.

தேடுதல் வேட்டை
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னரே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாக வைத்து போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களை இன்னும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications