சர்ச்சையை கிளப்பிய மாலத்தீவு அமைச்சர்கள்.. ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த லட்சத்தீவு நிர்வாகி
மாலே: பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், லட்சத்தீவு நிர்வாகி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் லட்சத்தீவுக்கு சென்று இருந்தார். லட்சத்தீவில் உள்ள கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் ''சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவு தான் சரியான தேர்வு'' என்றும் தனது பதிவில் கூறியிருந்தார்.

லட்சத்தீவு சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்து இருந்தது. இந்த நிலையில், மாலத்தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளையும் இந்தியாவுக்கு எதிரான இனவெறி கருத்துகளையும் கூற ஆரம்பித்தனர். இதுவே அனைத்து சர்ச்சைகளுக்கும் ஆரம்பம். ஆனால், ஏதோ ஒரு சிலர் இதுபோல சொல்வது பெரிய பிரச்சினை இல்லை.
ஆனால், அந்நாட்டின் கலைத்துறை துணை அமைச்சரே இந்தியப் பிரதமர் மோடி குறித்து மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இஸ்ரேலின் கைப்பாவை என்றெல்லாம் பிரதமர் மோடியைச் சாடினார். அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி மோசமான கருத்துகளைக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அவருடன் வேறு இரு அமைச்சர்களும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதற்கு இந்தியர்கள் தக்க பதிலடியைக் கொடுக்க ஆரம்பித்தனர். பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார் தொடங்கி பலரும் கண்டித்தனர். மேலும், இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்தனர். தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு, தனது வருவாய்க்கு சுற்றுலாவையே நம்பி உள்ளது. இதனால், மாலத்தீவு கலங்கி போனது. உடனடியாக சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர்கள் மீது மாலத்தீவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழலில், மாலத்தீவு அமைச்சர்கள் பேசியது தொடர்பாக யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரபுல் கோடா படேல் ஆவேசமாக பேசியுள்ளார். இந்தியாவின் கண்ணியத்திற்கு விடப்பட்ட சவால் என்று லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபுல் கோடா படேல் கூறியதாவது:- இது போன்ற விஷயங்களை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.
ஒட்டு மொத்த நாடும் பிரதமர் மோடிக்கு ஆதரவை வெளிப்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் ஆதரவை காட்டினர். மாலத்தீவுகளுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுத்துள்ளது. மாலத்தீவு மக்களை இந்தியாவுக்கு வரவேற்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவர்கள் இங்கு வர விரும்பி இங்குள்ள அழகை பாராட்டினால் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம். இதுதான் நமது பாரம்பரியம். இதில் என்ன தவறு உள்ளது. அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications