கடவுளை தீவிரவாதியாக சித்தரித்து அட்டைப்படம்: சார்லி ஹெப்டோவுக்கு வாடிகன் செய்தித்தாள் கண்டனம்
வாடிகன்: பிரான்ஸை சேர்ந்த சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தனது சிறப்பு பிரதியின் அட்டைப்படத்தில் கடவுளை துப்பாக்கி வைத்திருக்கும் தீவிரவாதி போன்று சித்தரித்து கார்டூன் போட்டுள்ளதை வாடிகனைச் சேர்ந்த செய்தித்தாள் கண்டித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் முதலாவது ஆண்டு நினைவாக சிறப்பு பிரதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த பிரதியின் அட்டைப்படத்தில் கடவுள் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற கார்டூன் போட்டு அதன் அருகே ஒரு வருடமாகிவிட்டது: கொலைகாரன் இன்னும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாடிகனைச் சேர்ந்த செய்தித்தாளான ரொமானோ அந்த கார்டூனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த செய்தித்தாளில் கூறப்பட்டிருப்பதாவது,
மதத்தை இப்படி சித்தரிப்பது புதிது அல்ல. மத தலைவர்கள் வன்முறையை கடவுளின் பெயரால் கண்டித்து வருகிறார்கள். வெறுப்பை காட்ட கடவுளை பயன்படுத்துவது கடவுளை நிந்திப்பது ஆகும் என்று போப் பிரான்சிஸ் பலமுறை தெரிவித்துள்ளார். சார்லி ஹெப்டோ அதை தான் செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டதால் சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் புகுந்த இரண்டு சகோதரர்கள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications