பின்லாந்தில் மாயமான சென்னை பொறியாளர் ஹரிசுதன் கடற்கரையில் சடலமாக மீட்பு
பின்லாந்து நாட்டில் காணாமல் போன சென்னை பொறியாளர் ஹரிசுதன் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஹர்னசாரி: பின்லாந்து நாட்டில் மாயமான சென்னை பொறியாளர் ஹரிசுதன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26 வயது பொறியாளர் ஹரிசுதன். இவர் பின்லாந்தில் டி சி எஸ் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாக இந்திய தூதரகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில பின்லாந்தில் உள்ள ஹெர்னெசாரி என்னும் கடற்கரையில் வியாழனன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அடையாளம் காணப்பட்டு பரிசோதனைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று ஃபின்லாந்து நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹரிசுதன் அவர் தாயாருடன் மொபைலில் இருந்து பேசி உள்ளார். பிறகு அவர் தனது வீடு நோக்கி மாலை 5.40க்கு நடந்து செல்வது ஒரு சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அதன் பின் மாலை சுமார் 6.45 மணிக்கு அவருடைய மொபைல் ஹர்னசாரியில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பின்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஹரிசுதனின் செல்போன் சிக்னலை வைத்து சடலத்தை மீட்டுள்ளதாகவும், எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.