ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 வீரர்கள் பலி.. கொலம்பியாவில் சோகம்
பொகோடா: கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் 34 ராணுவ வீரர்கள் பலியாகினர். 21 பேர் மாயமாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று ஹெர்குலஸ் சி -130 ரக ராணுவ விமானம் பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்கள் 125 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்தவுடன் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
முதற்கட்டமாக 34 பேர் வரை பலியாகி உள்ளனர். 21 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 70 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? என்பது உடனடியாக தெரியவில்லை. இயந்திர கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி கொலம்பியா பாதுகாப்பு துறை அமைச்சர் பெட்ரோ சான்செஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், '' பெரு மற்றும் ஈகுவடார் எல்லையோர பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது'' என்றார். புட்டுமயோ மாகாண ஆளுநர் ஜான் கேப்ரியல் மோலினா, தற்போது வரை 34 பேர் பலியாகி உள்ளனர்.21 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை'' என்று கூறியுள்ளார். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிர் பலி அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெர்குலஸ் சி -130 ராணுவ விமானம் அமெரிக்காவின் தயாரிப்பாகும். அமெரிக்காவின் முன்னணி லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் சுமார் 60க்கும் அதிகமான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. போர் மற்றும் இயற்கை பேரிடர் சமயங்களில் இந்த விமானங்களின் தேவை அதிகமாக இருக்கும். கடினமான, சீரமைக்கப்படாத (Unprepared Runways) ஓடுபாதைகளில் கூட இந்த விமானத்தால் தரையிறங்க முடியும்.
இந்த விமானம் ராணுவ வீரர்களை ஏற்றி செல்வது, இயற்கை பேரிடரின்போது மக்கள் மீட்பு பணியை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சரக்குகளை எடுத்து செல்லவும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications