பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு..20க்கும் மேற்பட்டோர் பலி! நாங்கதான் காரணம்.. பொறுப்பேற்ற அமைப்பு
லாகூர்: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை பயிற்சி அளித்து அனுப்பி தாக்குதலில் ஈடுபடுவதாக பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு உள்ளேயே பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு அந்நாட்டுக்கு எதிராகவே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக பலுசிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதும் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தானில் நடந்த கொடூர குண்டு வெடிப்பு தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பலியாகி உள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு அலுவலகத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்த நிலையில் அங்கிருந்து ரயில் நடைமேடைக்கு செல்லும் வழியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் எக்ஸ்பிரஸ் பெஷாவர் நோக்கி காலை 9 மணிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
❗️Explosion In Pakistan’s Balochistan Kills 20, Injures Dozens
— RT_India (@RT_India_news) November 9, 2024
A fatal blast occurred at Quetta Railway Station on Saturday,as a train prepared to depart for Peshawar, Dawn News reports.
pic.twitter.com/legfib50zP
இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இது தற்கொலை படை தாக்குதலா அல்லது ஏற்கனவே திட்டமிட்டு குண்டு வெடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்கொலை படை தாக்குதல் மூலம் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம். ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது, குண்டுவெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .குண்டுவெடிப்பு நடந்த போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ரயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் தான் குண்டு வெடித்தது என தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழு தலைவர் ஜீசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரயில் நிலைய தாக்குதல் சம்பவத்திற்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று இருக்கிறது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்திருக்கும் நிலையில் இது நாட்டின் மிகப்பெரிய மாகாணமாக இருக்கிறது. அதே நேரத்தில் பாலூச் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வருகிறது.
அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குவெட்டா ரயில் நிலைய தாக்குதல் சம்பவத்திற்கும் நாங்கள் தான் காரணம் என அந்த அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. ரயிலில் ராணுவ துருப்புகள் பயணித்த நிலையில் அவர்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பு கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications