தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு.. மக்கள் அச்சம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கிய நிலையில் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இருந்தது.
அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே தோஹாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்து அதிபர் அஷ்ரப் கானியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினர். இதையடுத்து அவர் நாட்டில் தலிபான்களால் வன்முறை ஏற்படக் கூடாது என்பதால் வெளியேறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து அதிபர் மாளிகையையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். தலிபான்கள் கைவசம் ஆப்கானிஸ்தான் சென்றதால் காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6.08 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முதல் கட்டமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.












Click it and Unblock the Notifications