66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்த எகிப்து ஏர் விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்திருப்பதை பிரஞ்சு கடற்படை இன்று உறுதி செய்துள்ளது.
கடந்த 19ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற எகிப்து ஏர் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் எந்த உடல்களும் முழுமையாக மீட்கப்படவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டறியப்படாமல் இருந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கறுப்பு பெட்டிகளில் இருந்து சிக்னல்களை மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறிந்திருப்பதாக எகிப்து அரசு இன்று தெரிவித்தது.
பிரெஞ்சு கடற்படை கப்பலில் உள்ள ஒலி ஆய்வு அமைப்புகள் இதனை கண்டறிந்ததாக விமான போக்குவரத்து துறை கூறியது. இதனை பிரெஞ்சு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து கடலுக்கடியில் நீந்திச் சென்று கருப்பு பெட்டிகளை மீட்பதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரோபோக்கள் கொண்ட மற்றொரு கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஒரு வாரத்திற்குள் சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications