படுவேகமாக மாறும் சர்வதேச அரசியல்.. உள்ளே வரும் உலக நாடுகள்.. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த அக். 7ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அன்றைய தினம் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.

முதலில் சரமாரியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேலில் இறங்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியது. மேலும், இஸ்ரேலில் இருந்து பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
போர் நிறுத்தம்: இந்த திடீர் தாக்குதலால் முதலில் இஸ்ரேல் திணறினாலும் கூட, அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. கடந்த சில வாரங்களாகவே காசா பகுதியில் சரமாரியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. முதலில் காசா பகுதியின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அதன் பிறகு உள்ளே இறங்கியும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியது. குறிப்பாக காசாவின் சுரங்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும், காசா மருத்துவமனைகள் கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதாகச் சொல்லி அதன் மீதும் தாக்குதல் நடத்தியது.
பேச்சுவார்த்தை: இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து கத்தார் மத்தியஸ்தனாம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் பேட்ஜ் பேட்ஜாக பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இஸ்ரேலும் தனது சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே போர்நிறுத்தம் அங்கு இருந்தது.
போர் நிறுத்தம் நீட்டிப்பு: முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் இருந்த நிலையில், அதன் பிறகு அது இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைய இருந்த நிலையில், அதை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஒப்பந்தம் முடிவடையச் சற்று நேரம் மட்டுமே இருந்த நிலையில், இந்த அறிவிப்பை இரு தரப்பும் வெளியிட்டுள்ளது. இருப்பினும், அதற்கான கண்டிஷன்கள் என்ன என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
பிணைய கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர்ந்து கவனிக்கப் போர் நிறுத்தம் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. மறுபுறம் ஹமாஸும் ஏழாவது நாளுக்குப் போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் என்று ஒரே வரியில் மட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய கத்தார், போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது.
காசாவில் மேலும் பிணையக் கைதிகளை விடுவிக்கச் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications