கடைசி நிமிடத்தில் பெரிய ட்விஸ்ட்.. பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு செக்.. எதிர்க்கட்சிகள் வெற்றி!
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2ம் சுற்றில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் தரப்பு அதிக இடங்களை வெல்லும் சூழல் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடான பிரான்ஸ் நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை அங்கு அதிபர் ஆட்சி முறையே இருந்து வருகிறது.

இதனால் அங்கு அதிபர் பதவிக்குத் தனியாக ஒரு தேர்தலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது எம்பிக்களை தேர்வு செய்யத் தனியாகத் தேர்தலும் நடக்கும். அந்த எம்பி தேர்தல் தான் இப்போது நடந்தது.
பிரான்ஸ் தேர்தல்: பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை நமது நாட்டில் நடக்கும் தேர்தலில் இருந்து சற்று மாறுபட்டது. அதாவது இந்தியாவில் தேர்தலில் 3 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் அதிக வாக்குகளைப் பெற்றவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். அவர் 35% வாக்குகளைப் பெற்றாலும் சரி, மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் அவர் அதிகம் பெற்றாலே போதும் அவர் வென்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால், பிரான்ஸில் அப்படி இல்லை.. அதிகபட்ச வாக்குகளைப் பெறுவது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகப் பதிவாகும் வாக்குகளில் 50% மேல் பெறுபவரே வெல்பவராக அறிவிக்கப்படுவார்.
இரண்டு கட்ட தேர்தல்: இதனால் அங்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும். முதல் கட்ட தேர்தலில் யார் 50% மேல் வாங்குகிறார்களோ.. அவர்கள் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஒருவேளை யாருமே 50% மேல் பெறவில்லை என்றால் முதல் 2 இடங்களை பெறுவோருக்கு இடையே 2ம் சுற்றுத் தேர்தல் நடக்கும். இவர்களைத் தவிர யார் முதல் சுற்றுத் தேர்தலில் 12.5%க்கு மேல் பெற்றுள்ளனரோ அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். முதலாம் சுற்று கடந்த மாதம் இறுதியில் நடந்த நிலையில், இரண்டாம் சுற்றுத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.
முதல் சுற்றுத் தேர்தலில் தீவிர வலதுசாரியான மரைன் லு பென்னின் தேசிய பேரணி அதிக இடங்களில் வெல்லும் சூழல் ஏற்பட்டு இருந்தது. இம்மானுவேல் மக்ரோனின் கட்சி 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தச் சூழலில் தான் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதில் 577 எம்பி சீட்களை தேர்வு செய்ய இந்தத் தேர்தல் நடந்தது.
அதிர்ச்சி: இதற்கிடையே இரண்டாம் சுற்று தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் அதிபர் மாக்ரோனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இடதுசாரிகள் கூட்டணி அதிக சீட்களில் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. அதிபர் மாக்ரோனின் கட்சி 2ம் இடம் பிடிக்கும் நிலையில், தீவிர வலதுசாரியான தேசிய பேரணி கட்சி 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணிக்கு அதிக சீட்கள் கிடைத்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்குத் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொங்கு நாடாளுமன்றம் அமையும்பட்சத்தில் அடுத்த யார் பிரதமர் என்பதைத் தேர்வு செய்யப் பல வாரங்கள் கூட ஆகலாம் என்றே கூறப்படுகிறது. இப்போது அங்கு மக்ரோன் கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் அட்டல் பிரதமராக இருக்கிறர்.
ராஜினாமா: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதேநேரம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் தொடர தயார் என்று கேப்ரியல் அட்டல் அறிவித்துள்ளார்.
முன்கூட்டியே தேர்தல்: பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை அங்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அங்குக் கடைசியாக 2022இல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதன்படி பார்த்தால் அடுத்து 2027இல் தான் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வென்றது. இதனால் இம்மானுவேல் மக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்தார்.
இதனால் காரணமாக இரண்டே ஆண்டுகளில் அங்கு தேர்தல் நடந்த நிலையில், மக்ரோன் தரப்பிற்கு நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை கையை விட்டுப் போய் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பொதுவாக அதிபரும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபரால் நினைத்து காரியங்களை ஈஸியாக செய்ய முடியும். ஆனால், வெவேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபரின் அதிகாரம் குறையும். இப்போது அதுபோன்ற ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications