சவுதியின் தம்மாம் நகரில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி, 5 பேர் காயம்
தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர்.
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள ஷியா மசூதியான அல் அனௌத் மசூதியில் இன்று மதியம் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தா அணிந்து வந்தார். அவர் பெண்கள் மசூதிக்குள் நுழையும் வாயிலுக்கு சென்றார். அந்த வாயில் பூட்டியிருந்ததால் ஆண்கள் செல்லும் வழியாக மசூதிக்குள் நுழைய முயன்றார்.

அப்போது புர்காவில் இருந்த அந்த நபரை பாதுகாவலர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர், பாதுகாவலர்கள் இருவர் மற்றும் ஒருவர் பலியாகினர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அல் காதீஹ் கிராமத்தில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் இந்த வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications