100 கோடி விண்மீன்களை போட்டோ எடுக்கவிருக்கும் ‘கையா’ செயற்கைகோள்...
பாரீஸ்: அண்டவெளியின் பால்வீதியில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆராய்ந்து வரைபடமாக எடுத்து அனுப்ப ஐரோப்பிய விண்வெளி நிலையம் கையா என்ற அதிநவீன தொலைநோக்கியை நேற்று விண்ணிற்கு அனுப்பியுள்ளது.
நமது பூமி, சூரியன் ஆகியவற்றைக் பால்வீதி மண்டலம் என்பது பல ஆயிரம் கோடி விண்மீன்களைக் கொண்டது. இந்த விண்மீன்களின் இருப்பிடம் அவை நகரும் தன்மை ஆகிவற்றை ஒரு வரைபடமாகத் தயாரிப்பது மனித குலத்தின் பன்னெடுங்காலக் கனவாக இருந்து வந்தது. இந்தக் கனவைப் பூர்த்தி செய்வதுதான் தற்போது விண்ணுக்குச் சென்றிருக்கும் கையா செயற்கைக் கோளின்பணி.
நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள "கையா" (GAIA) செயற்கைக்கோள் எப்படிச் செயல்படப் போகிறது. அதில் உள்ள பாகங்கள் எவை. அவற்றால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பன போன்ற விவரங்கள் இதோ உங்களுக்காக...

வெற்றிகரமாக....
நேற்று ரஷ்ய தயாரிப்பான சோயூஸ் ராக்கெட் மூலம், பிரெஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த கையா செயற்கைக் கோளானது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 100 கோடி டாலர் மதிப்பிலான தொலைநோக்கி, ஏவப்பட்ட 42வது நிமிடத்திலேயே ராக்கெட்டை விட்டு பிரிந்து சென்றது.

விண்மீன் கணக்கெடுப்பு...
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதைப் போல பால்வீதி மண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான விண்மீன்களைக் கணக்கெடுத்து முப்பரிமாண வடிவிலான வரைபடமாகத் தயாரிக்க உதவப் போகிறது இந்தச் செயற்கைக்கோள்.

புகைப்படங்கள்....
மிக சக்திவாய்ந்த 1000 மெகா பிக்சல் கேமிராவுடன் இயங்கும் இதன் தொலைநோக்கியானது அண்டவெளியில் உள்ள 100 கோடி நட்சத்திரங்களை பற்றி ஆராயவும், அவைபற்றிய முப்பரிமாண புகைப்படங்களை எடுத்து அனுப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும்.

துல்லியமான தகவல்கள்....
மூன்றுவார பயணத்திற்கு பிறகு சுமார் 15 லட்சம் மைல்களுக்கு அப்பால் இந்த தொலைநோக்கி சென்றுவிடும். அப்போது அதன் பார்வையிலிருந்து பூமி மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் தூரம், வேகம், இயக்கம், திசை பற்றிய தகவல்களை துல்லியமாக அளிக்கும்.

5 வருட ஆராய்ச்சி....
5 வருட காலம் அண்டவெளியில் சுற்றி ஆராயும் இந்த தொலைநோக்கி 50 ஆயிரம் கோள்கள் பற்றிய தகவல்களை தரும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் அண்டவெளியில் நிகழும் அரிய நிகழ்வான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவது, புதிய நட்சத்திரங்கள் உருவாவது தொடர்பான புகைப்படங்களையும் அனுப்பி விஞ்ஞானிகளுக்கு உதவும் இந்தத் தொலைநோக்கி.

விண்பாறைகளால் ஆபத்தா...?
இந்த செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களால் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே சுற்றிவரும் விண்பாறைகளால் பூமிக்கும் எதாவது அபாயம் இருக்குமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சூரியத்தகடுகள்....
செயற்கைக் கோளில் உள்ள பிற உபகரணங்களை இயக்குவதற்கான சக்தியைத் தயாரிப்பதற்காக இந்தச் செயற்கைக்கோளில் சூரியசக்தித் தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காகவே, சூரியனை பூமி மறைக்காத வகையிலான எல் 2 (L2) வட்டப்பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கையாவில் உள்ள உபகரணங்களைக் பாதுகாப்பதற்காக சூரி ஒளி மறைப்புத் தகடுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

100 கோடி விண்மீன்கள்....
கையா அனுப்பும் தகவல்களின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு சுமார் நூறு கோடி விண்மீன்களைக் கொண்ட முப்பரிமாண வரைபடம் வெளியிடப்படும். எனினும் இந்த வரைபடத்தில் இருக்கப்போவது பால்வீதி மண்டலத்தில் உள்ள வெறும் ஒரு சதவீத விண்மீன்கள்தானாம்.












Click it and Unblock the Notifications