அமெரிக்கா கண்ணில் மண்ணை தூவ டைப் ரைட்டரை தூசிதட்டும் ஜெர்மனி
பெர்லின்: அமெரிக்காவின் உளவில் இருந்து தப்பிப்பதற்காக, ஜெர்மனி பழையபடி டைப் ரைட்டர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சியான என்எஸ்ஏ பல நாடுகளின் ரகசியங்களையும், திருடி வருவதாக ஸ்னோடன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் விவரங்களையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். உண்மை வெளியானதால், ஸ்னோடனை கைது செய்ய அமெரிக்கா மிகவும் பிரயத்தனப்பட்டது.

இந்நிலையில், தங்கள் நாட்டு ரகசியங்களை அமெரிக்கா களவாடியதா என்பதை அறிய, ஜெர்மனி நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவரான பண்டேஸ்டாக் தொலைக்காட்சி நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், "எலக்ட்ரானிக் மூலமாக தகவல்களை பரிமாற்றம் செய்யும்போதுதான் திருடப்படுகிறது. எனவே இந்த வகை பரிமாற்றத்தை தவிர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக டைப் ரைட்டர்களை பயன்படுத்தி தகவல்களை பதிவு செய்யும் யோசனை உள்ளது" என்றார்.
இருப்பினும் ஜெர்மனியில் வேறு எந்த முக்கிய பிரமுகரும் இதுபோன்ற யோசனையை முன்னெடுத்து கருத்து தெரிவிக்கவில்லை. டைப் ரைட்டரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதில் ஜெர்மனி முதல் நாடு கிடையாது. ரஷ்யா ஏற்கனவே இதுபோன்ற நடைமுறைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications