தோழியை இழுத்து அழ வைத்து அழகு பார்த்த குட்டி இளவரசர்... நியூசிலாந்தில் களேபரம்
வெலிங்டன்: நியூசிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது முதல் விளையாட்டு நிகழ்ச்சியில் தன் செல்லமான குறும்புகளால் களேபரம் செய்து மற்றவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் குட்டி இளவரசர் ஜார்ஜ்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் மகன் குட்டி இளவரசர் ஜார்ஜுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
9 நாள் பயணமான இது குட்டி இளவரசர் ஜார்ஜின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த 7ம் தேதி வெலிங்டன் விமான நிலையம் சென்றடைந்த அரச குடும்பத்தை அந்நாட்டு பிரதமர் ஜான் கீ வரவேற்றார்.
அரச குடும்பத்தினரைக் காண ஏராளமான மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்தில் கூடி இருந்தனர். அதனைத் தொடர்ந்து அரச மாளிகையில் தங்க வைக்கப் பட்டனர் இளவரசர் குடும்பத்தார்.
வித்தியாசமான நிகழ்ச்சி...
அங்கு குட்டி இளவரசர் ஜார்ஜ் தன் சக வயது குழந்தைகளுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
முதல் நண்பர்கள் சந்திப்பு...
அந்த நிகழ்ச்சியில் குட்டி இளவரசர் ஜார்ஜ், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதற்காக அவரை போலவே 8 மாத குழந்தைகள், அதாவது ஜார்ஜ் பிறந்த மாதத்தில் பிறந்த பத்து பேர் தேர்வு செய்யப் பட்டிருந்தனர்.
குழந்தைகள் உலகம்...
இதில் ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தை ஒன்று உட்பட மொத்தம் நான்கு ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் குட்டி இளவரசருடன் தாவி பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.
ஒரே ஜாலி தான்...
ஜார்ஜும் சமத்தாக சக குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து புன்முறுவலுடன் விளையாடினாராம். இதனை அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.
இப்பவே சேட்டையை ஆரம்பிச்சுட்டாரே...
அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் அக்கிருந்த குட்டிப் பாப்பா ஒன்றை பிடித்து இழுத்து வம்பிழுத்துள்ளார் ஜார்ஜ். இந்த திடீர் தாக்குதலால் பயந்து போன அந்தப் பாப்பா வீறிட்டு அழுதுள்ளது.
களேபரமான விளையாட்டு நிகழ்ச்சி...
பின்னர் அக்குழந்தையை அனைவரும் சேர்ந்து சமாதானப் படுத்தியுள்ளனர். இதனால் ஜார்ஜ்-ன் முதல் வெளி விளையாட்டு நிகழ்ச்சி களேபரமானது.