சிறுமிகளை மனித வெடிகுண்டுகளாக மாற்றும் போக்கோ ஹரம்.. நைஜீரிய பயங்கரம்!
டகர், செனகல்: வடக்கு நைஜீரியாவில் நேற்று ஆள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 20க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளார் ஒரு 10 வயது சிறுமி. நைஜீரியாவை ஆட்டிப்படைத்து வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் இந்த செயல் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
எந்த விவரமும் தெரியாத வயதில் உள்ள ஒரு சிறுமியை அவர்கள் மனித வெடிகுண்டாக பயன்படுத்தியது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதையே இது காட்டுவதாக உள்ளது.
வட கிழக்கில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்...
நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி என்ற நகரில் இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.
ஷாப்பிங் பகுதியில்...
மைடுகுரியில் நடந்த இந்தத் தாக்குதல் நடந்த பகுதியான நிறைய கடைகள் நிறைந்த மக்கள் நிரம்பிய பகுதியாகும்.
கறிக்கடை பகுதியில்...
மைடுகுரி மார்க்கெட்டில் கோழி இறைச்சி விற்கும் கடைகள் உள்ள பகுதியில், இந்த சிறுமி தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
முதல் முறையல்ல...
இந்த மார்க்கெட்டில் கடந்த வருடம், ஒரே வாரத்தில் இரு முறை பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 10 வயதேயான சிறுமியை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இவர்தான் வயதில் இளையவர்...
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் பயன்படுத்திய வயதில் மிகவும் இளைய மனித வெடிகுண்டு இந்த சிறுமிதான். பெண்களை மட்டுமல்லாமல் சிறுமிகளையும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் ஒருவரா...
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபாக் என்ற நகரிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவியரை கடத்திச் சென்றனர். அவர்களில் பலர் சிறுமிகள் ஆவர்.
வரலாறு காணாத கொடூரம்...
10 வயது சிறுமியை மனித வெடிகுண்டாக அனுப்பிய போக்கோ ஹரம் அமைப்பின் செயல் வரலாறு காணாத கொடூரம் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
சிதைந்து போன உடல்...
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த சிறுமியின் உடல் அடையாளமே காண முடியாத அளவுக்கு சிதறிப் போய் விட்டது. அவருக்கு 10 வயதுதான் இருக்கும். மிகவும் சிறிய பெண் என்றார் அவர்.
உடல் முழுவதும் குண்டுகள்...
அபுபக்கர் பரூக் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், அந்த சிறுமியின் உடல் முழுவதும் டெட்டனேட்டர்களை பொருத்தியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது உடலை சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது.
சிறுமியின் விருப்பத்தையும் மீறி...
உண்மையில் அந்த சிறுமியின் விருப்பத்தையும், எதிர்ப்பையும் மீறி அவரது உடலில் வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் கட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது உடலில் கட்டப்பட்டது வெடிகுண்டுகள் என்று அந்த சிறுமிக்கே கூட தெரியாமல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.
புதிய பாதையில் தீவிரவாதிகள்...
தலைநகர் அபுஜாவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீவிரவாதிகள் புதிய பாதையைத் தேர்வு செய்துள்ளதாகவே தெரிகிறது. இது புதியது. கவலை அளிப்பதாகும். இளம் சிறுமிகளையும், இளம் பெண்களையும் தங்களது ஆயுதம் போல தீவிரவாதிகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாகும் என்றார் அவர்.