நேபாளம் மன்னர் குடும்ப சோக கதை தெரியுமா? குடும்பத்தையே சுட்டுக்கொன்ற இளவரசர்!
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் நடைபெற்றது. மன்னராட்சி நடைபெற்று கொண்டு இருந்த போது, மன்னரின் குடும்பத்தை மொத்தமாக இளவரசர் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். நேபாளத்தை அதிர வைத்த வைத்த இந்த சம்பவத்தின் நினைவலைகளை பார்க்கலாம்.
நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால், அந்த நாட்டின் அரசியல் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

மீண்டும் மன்னராட்சி வேண்டும் என
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த நாட்டில் 2001ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நேபாளத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில் மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 2001ஆம் ஆண்டு நேபாளத்தின் மன்னராக இருந்தவர் பிரேந்திர பீர் பிக்ரம் ஷா தேவ். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், இந்தியாவின் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பள்ளியிலும் பயின்றவர். இவருடைய வளர்ச்சித் திட்டங்கள், சமூக சீர்திருத்தங்கள் காரணமாக நேபாள மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.
5 பேரையும் சுட்டு கொன்றார்
மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யாவை 1970ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் தீபேந்திரா, இளவரசி ஸ்ருதி, இளவரசர் நிரஞ்சன் என மூன்று குழந்தைகள். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று, மன்னர் குடும்பத்தினர் காத்மாண்டுவில் உள்ள நாராயண்ஹிட்டி அரண்மனையில் ஒன்று கூடினர்.
இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. விருந்து தொடங்கியபோது, 29 வயதான தீபேந்திரா (பட்டத்து இளவரசர்) அங்கு இருந்தார். விருந்து நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மாயமான அவர், மீண்டும் திரும்பி வந்தபோது கமாண்டோ உடையில் இருந்தார். அசால்ட் ரக இரண்டு துப்பாக்கிகளும் வைத்திருந்தார்.
என்ன செய்தா என்று கேட்டபடியே உயிர் பிரிந்தது
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தீபேந்திரா தன் தந்தையை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், சில நொடிகள் அப்படியே நின்றிருந்த மன்னர், பிறகு மெதுவாக தரையில் அமர்ந்து சரிந்துள்ளார். தனது மகனை பார்த்து "என்ன செய்தாய்?" என்று கேட்டபடியே உயிர் பிரிந்தது.
தீபேந்திரா, பிறகு தன் தாய் ராணி ஐஸ்வர்யா, உடன்பிறந்தவர்களான ஸ்ருதி, நிரஞ்சன் மற்றும் மேலும் ஐந்து உறவினர்களை சுட்டுக் கொன்றார். சிறிது நேரத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதனால் தீபேந்திரா தலையில் குண்டுக் காயத்துடன் பின்னர் கண்டெடுக்கப்பட்டார். அது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. தீபேந்திரா கோமா நிலைக்குச் சென்று, ஜூன் 4ஆம் தேதி இறக்கும் முன் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்
தீபேந்திராவின் மாமா ஞானேந்திரா அரியணை ஏறினார். மன்னராட்சி ஒழிக்கப்படும் வரை அவர் மன்னராக இருந்தார். அரசு விசாரணையில், இந்தக் கொலையை தீபேந்திராவே செய்ததாக கூறப்பட்டது.
நேபாள அரசியல்வாதியான பசுபதி ஷம்ஷேர் ஜங் பகதூர் ராணாவின் மகள் தேவ்ஞானி ராணாவுடன் தீபேந்திரா காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே தீபேந்திரா தனது குடும்பத்தினரை கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தேவ்ஞானி, குவாலியரின் முன்னாள் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாதவராவ் சிந்தியா அவரது தாய்மாமன். வசுந்தரா ராஜே சிந்தியா அவரது அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் சுட்டதாகவும்
மன்னர் குடும்பம் தீபேந்திராவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரைப் பாதித்து, குடும்பத்தைக் கொலை செய்யத் தூண்டியது என்றும் கூறப்படுகிறது. தீபேந்திராவை வேறொரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென ராணி ஐஸ்வர்யா விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிர்ப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமன்றி இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, விருந்தில் தீபேந்திரா ஒரு விருந்தினருடன் சண்டையிட்டதாகவும், குடிபோதையில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications