தெற்கு நோக்கி போங்க.. எச்சரிக்கும் இஸ்ரேல்! தீவிரமடையும் வான்வழி தாக்குதல்.. எல்லாம் இதுக்காகதான்
காசா: கடந்த 15 நாட்களாக காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், தற்போதுதான் உதவி பொருட்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலை மேலும் தீவிரமாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக கொடூரமான பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவுக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் சப்ளையை இஸ்ரேல் துண்டித்திருப்பதால் சுமார் 23 லட்சம் காசா மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை தெற்கு நோக்கி, எகிப்தின் ராஃபா எல்லைக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐநாவும் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த பொருட்கள் கடந்த சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில் உதவி பொருட்கள் கடுகளவுக்குதான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் எரிபொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்காததால் மருத்துவமனையில் இயங்கும் ஜெனரேட்டர்கள் முற்றிலுமாக செயலிழந்திருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தரை மார்க்கமாக காசாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறது. இதற்கு களத்தை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக காசா மீதான் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறுகையில், "காசா அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதி. அங்கு எதிரிகள் எந்த விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தலாம். எனவே நாங்கள் அவர்களை எதிர்க்க தயாராகி வருகிறோம். கண்ணி வெடிகளும், சுரங்கபாதைகளும் எங்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேபோல 200க்கும் அதிகமான பணயக்கைதிகள் அவர்கள் வசம் இருக்கிறார்கள். எனவே நாங்கள் கவனமாக செயல்படுவது அவசியமாகும். எனவே நாங்கள் மேலும் அதிகமான வான்வழி தாக்குதலை திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications