போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்! இறங்கிவர அடம் பிடிக்கும் நெதன்யாகு! மீண்டும் பேச்சுவார்த்தை
காசா: பாலஸ்தீனம் மீது போரை தொடுத்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் படையினரை அழிப்பதாக சொல்லி கொத்து கொத்தாக அப்பாவி மக்களை கொலை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த போரை நிறுத்த ஹமாஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் இறங்கி வரவில்லை. போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் முன்மொழிந்த 60 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் ஒப்புக்கொண்டது. இத்திட்டத்தின்படி, காசாவில் உள்ள பணயக் கைதிகளில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என நெதன்யாகு கூறியிருக்கிறார்.

சர்வதேச அளவில் எதிர்ப்பு நிலவி வரும் போதிலும், காசா நகரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கும் நெதன்யாகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்த இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான தூதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார். "அனைத்து பணயக் கைதிகளும் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுவோம்" என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசாவை இராணுவமயமாக்கல், காசா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஹமாஸ் அல்லாத, பாலஸ்தீனிய அதிகாரசபை அல்லாத நிர்வாகத்தை நிறுவுதல் ஆகியவை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் என்றும் நெதன்யாகு கூறியிருக்கிறார்.
22 மாதப் போருக்குப் பிறகு, 50 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. காசா நகரத்தின் கிழக்கு பகுதிகளில் நேற்று கடும் குண்டுவெடிப்பு நடந்ததாக பாலஸ்தீனியர்கள் கூறியிருக்கின்றனர். இராணுவம் தாக்குதலின் முதல் படிகளை மேற்கொண்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்தது.
காசா நகரின் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களையும் தெற்கில் உள்ள தங்குமிடங்களுக்கு வெளியேற்றுவதற்கு மருத்துவ அதிகாரிகளும் சர்வதேச அமைப்புகளும் தயாராகுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் ஒரு தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அப்போதிருந்து காஸாவில் குறைந்தபட்சம் 62,192 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அப்பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications