காற்றில் பறக்கும் WHO அறிவுரைகள்.. 4ஆம் டோஸ் பணிகளை தொடங்கிய இஸ்ரேல்.. அதிருப்தியில் ஆய்வாளர்கள்
ஜெருசலேம்: கொரோனா வேக்சின் பணிகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழங்கிய அறிவுரைகளை இஸ்ரேல் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பது என்பது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பிறகு ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின.

பூஸ்டர் டோஸ்
இந்தச் சூழ்நிலையில், கடந்த நவ,.27இல் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் கொரோனா உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. மேலும், பூஸ்டர் பணிகளையும் அமெரிக்கா, ஐரோப்பிய என உலகின் பல்வேறு நாடுகளும் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் கூட வரும் ஜன. 10 முதல் வேக்சின் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு
இருப்பினும், உலக சுகாதார அமைப்பு பூஸ்டர் கொரோனா டோஸ் தேவையில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் முதலில் 2 டோஸ் கொரோனா வேக்சின் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்தாண்டு நடுப்பகுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 70% பேருக்கு வேக்சின் போட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல்
ஆனால், உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை எந்த நாடும் சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை, குறிப்பாக இஸ்ரேல் நாட்டில்! உலகில் மின்னல் வேகத்தில் வேக்சின் பணிகளை முடித்த முதல் நாடு இஸ்ரேல் தான். அந்த நாடு நேரடியாக பைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, வேக்சின் உற்பத்தியைச் சொந்த நாட்டிலேயே தொடங்கியது. இதனால் கொரோனா வேக்சின் பணிகளை வேகமாகத் தொடங்கிய இஸ்ரேல், அதே வேகத்தில் பூஸ்டர் டோஸ் பணிகளையும் ஆரம்பித்துள்ளது

4ஆம் டோஸ்
ஏற்கனவே இதுவரை பொதுமக்களுக்கு 3 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது 4ஆவதாக மேலும் ஒரு பூஸ்டர் டோஸை போடும் பணிகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு இந்த 4ஆவது கொரோனா டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஓமிக்ரான் பாதிப்புக்கு எதிராக இந்த 4ஆம் டோஸ் வேக்சின் பாதுகாப்பைத் தரும் என்றும் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆய்வாளர்கள் அதிருப்தி
அங்கு இப்போது சுகாதார ஊழியர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 4ஆவது டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து ஆய்வாளர்களும் இஸ்ரேலின் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வுகளே இன்னும் முடியவில்லை. இந்தச் சூழலில் 4ஆவது டோஸ் ஓமிக்ரானை தடுக்க முடியும் எனக் கூற எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று ஒரு தரப்பினர் இஸ்ரேல் முடிவை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications