"தீவிரவாதத்தை நடத்துவதே ஷெரீப் அரசு தான்.." ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய பாகிஸ்தான் முதல்வர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மறைமுகமாகத் தீவிரவாதத்திற்குப் பல காலமாகவே ஆதரவளித்து வருவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா முதல்வர் ஒருவரே, அங்குள்ள ஷெரீப் அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக சாடியுள்ளார். அரசே போலியான தீவிரவாதத் தாக்குதல்களையும் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா என்ற கிராமத்தில் தாக்குதல்கள் அதிகமாகவே இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாகாணத்தில், முதல்வராக இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த சொஹைல் அப்ரிடி என்பவர் இருக்கிறார்.

அம்பலப்படுத்திய அப்ரிடி
கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி, அங்குள்ள மத்திய ஷெரீப் அரசு மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். பாகிஸ்தான் திட்டமிட்டு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதாகவும், தனது மாகாணத்தில் அமைதியை நாசப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத கொள்கையை அம்பலப்படுத்தும் வகையில் அப்ரிடி பேச்சு இருந்தது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் "போலி" பயங்கரவாத தாக்குதல்கள் அரசே நடத்துவதாகவும் அவர் சாடினார். பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டுவதாகவும், அதே நேரத்தில் கைபர் பிராந்தியத்தில் அமைதியைக் குலைப்பதாகவும் அப்ரிடி குற்றம் சாட்டினார். இது அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்படும் பயங்கரவாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில விஷமிகள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் மத்திய அரசில் இருக்கும் சில சக்திவாய்ந்த நபர்கள், நிலையற்ற தன்மையை நீடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள். இதன் காரணமாகவே அமைதி கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் கூட திட்டம் போட்டுக் கடத்தியுள்ளனர். எங்கள் விருந்தினர்களைக் கடத்தியதன் மூலம், இந்தப் பயங்கரவாதம் முற்றிலும் போலியானது என்பதை நிரூபித்துள்ளது.
செயற்கை பயங்கரவாதம்
கடந்த 71 ஆண்டுகளாக பாகிஸ்தானை ஆட்சி செய்பவர்களுக்கு கைபர் பக்துன்க்வாவில் அமைதி இருப்பது பிடிக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்கு மாறாக, தங்கள் நலன்களுக்காகப் பதற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்தச் செயற்கை பயங்கரவாதத்தால் கைபர் பக்துன்க்வா மக்கள் சலிப்படைந்துள்ளனர். சிலரின் சுயநலத்திற்காக இந்தப் போலி பயங்கரவாத செயல்கள் நடக்கிறது. இவர்கள் மக்களின் நலனைப் புறக்கணித்து, தங்கள் நலன்களுக்காக இயங்குகிறார்கள்.
இன்று நான் தெளிவாகச் சொல்கிறேன்: என் தலைவர் இம்ரான் கான் உங்களுக்கு ஒருபோதும் பணியவில்லை. நானும் பணிய மாட்டேன். எங்கள் அமைதியைச் சீர்குலைக்க முயலும் யாராக இருந்தாலும் அது எங்கள் எதிரி தான். நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
ராணுவ தாக்குதல்கள்
இந்த கைபர் பக்துன்க்வாவின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மத்ரே தாரா என்ற கிராமத்தில் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதில் சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் கொன்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைச் சுட்டிக்காட்டிய அப்ரிடி, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு பாகிஸ்தான் ஆயுதப்படைகள், பொதுமக்களைக் குறிவைத்து வேண்டும் என்றே தாக்குதல் நடத்துவதாக அப்ரிடி குற்றம் சாட்டினார். இது போர்க் குற்றங்களுக்கு இணையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications