2வது வீடு வாங்கியது குற்றமா.. லண்டன் பெண் சாப்பிட போன இடத்தில்.. உள்ளூர் மக்கள் செயலால் அதிர்ச்சி
லண்டன்: இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த பெண் கார்ன்வால் என்ற கிராமத்தில் இரண்டாவது வீடு வாங்கினார். இதற்காக அவரை அந்த ஊரே திட்டி தீர்த்து வருகிறது.இரண்டாவது வீடு வாங்குனது ஒரு குற்றம் என்று சொல்லி ஊரே அவரை கடுமையாக திட்டி வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
இந்தியாவில் வீடு மற்றும் நிலத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து போனதற்கு காரணம், ஒருவர் எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை இருப்பது தான்.ஒருவர் ஒரு வீடு தான் வாங்க முடியும்.அதற்கு மேல் வாங்க கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. அப்படியான நிலைமட்டும் இந்தியாவில் வந்தால் அனைவருக்கும் வீடு திட்டம் எளிதில் சாத்தியமாகி விடும்.

ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றம் தனி நபர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வர கூடாது? என்று கேள்வியும் எழுப்பியது. தனி நபர் வாங்கும் இரண்டாவது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் என அனைத்தையும் ஏன் இரண்டு மடங்குகளாக உயர்த்த கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் இப்படி என்றால், இங்கிலாந்திலும் இதே நிலை தான். இங்கிலாந்தில் சில இடங்களில் வாடகைக்கு வீடு பெறுவதே கடினமான நிலை உள்ளது. அங்கு இரண்டாவது வீடு வாங்குவது என்றால் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்தில் சில பகுதிகளில் இரண்டாவது வீடு வாங்குவதால்தான் தங்களால் வீடு வாங்க முடியாமல் போவதாக வேதனையில் உள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் அருகே கார்னிஷ் கிராமத்தில் இரண்டாவது வீட்டை வாங்கிய லண்டனை சேர்ந்த ஒரு பெண்ணை உள்ளூர் மக்கள் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்தனர். Rebecca Tidy என்ற பெண், விடுமுறை நாட்களை கழிக்கும் நோக்கில் செயின்ட் மாவ்ஸில் வசதியான வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை சுற்றுலா பயணிகளுக்காக தயார் செய்திருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த உள்ளூர் மக்கள் அவரை மிகமோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி வருகிறார்கள். உங்களை போன்றவர்ளால் தான் எங்களுக்கு வீடு வசதி கிடைக்காமல் போகிறது. "பேராசை கொண்ட பூமர்கள்" தான் இந்த நிலத்தை விற்பதாகவும், அவர்களின் இந்த விரோதப் போக்கை தடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள்.
ஓட்டலில் சாப்பிட போன Rebecca Tidy யை பேசக்கூடாத கெட்ட வார்த்தையால் பேசி,லண்டனுக்கு ஓடி போய்விடு என்று அந்த பகுதி மக்கள் மிரட்டி உள்ளனர். இந்த அளவிற்கு அந்த மக்கள் இரண்டாவது வீடு வாங்குபவர்களை வெறுக்க காரணமும் இருக்கிறது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, கார்ன்வாலில் சுமார் 6,000 வீடுகள் அங்கு வசிக்காத மக்களுக்குச் சொந்தமானவை. Padstow மற்றும் St Issey போன்ற பகுதிகள் 10 வீடுகளில் ஒன்று விடுமுறை இல்லங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் உள்ளூர் மக்கள் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications