மாயமான விமானம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பிடியில் உள்ளதா?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் எங்காவது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது. 239 பேருடன் சென்ற விமானம் என்ன ஆனது, அதில் பயணித்தவர்களின் கதி என்ன என்று இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்பதை விட கடத்தப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. விமானம் கஜகஸ்தானில் இருந்து இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் எங்காவது இருக்கக்கூடும் என்று விசாரணையாளர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விமானம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் எங்காவது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில்,
விமானம் மாயமானதற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது ஆப்கானிஸ்தானிற்கு வெளியே நடந்துள்ளது. அதிநவீன கருவிகளை வைத்துள்ள நாடுகளாலேயே விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் எங்களுக்கு எப்படி தெரியும் என்றார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களின் கமாண்டர் ஒருவர் கூறுகையில், இது போன்ற ஒரு விமானத்தை கடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
விமானம் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தால், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ரேடார்களில் சிக்கியிருக்கும். அதே சமயம் ரேடார்களில் தப்பிக்க விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததாக வேறு கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.