பிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது
Recommended Video
மாலே: பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஸான் இசுதீன் விருதை அந்நாட்டு அதிபர் இப்ராஹீம் சோலிஹ் வழங்கினார்.
அதே நேரம், மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு மாலத்தீவின் அதிபர் இப்ராஹீம் சோலிஹ் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபர் இப்ராகிமிற்கு பரிசளித்தார் பிரதமர் மோடி. மேலும், மாலத்தீவின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு செல்லும் வழியில், இன்று கேரளா வருகை தந்தார். அங்குள்ள குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். எடைக்கு எடை தாமரை மலர்களை துலா பாரமாக தந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
பின்னர், பாஜக கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, அவர் முதல் வெளிநாட்டுப் பயணமாக விமானம் மூலமாக மாலத்தீவு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசின் உயரிய நிஷான் விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹீத் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
#WATCH President of Maldives, Ibrahim Mohamed Solih confers upon PM Narendra Modi, Maldives' highest honour accorded to foreign dignitaries, 'The Most Honourable Order of the Distinguished Rule of Nishan Izzuddeen'. pic.twitter.com/dzl79XZXzN
— ANI (@ANI) June 8, 2019
மாலத்தீவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை கவுரவிக்கும் விதத்தில், இந்த விருது அந்நாட்டு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் ராஜாங்க ரீதியிலான மிக முக்கிய பயணமாக அமைந்துள்ளது.
மாலத்தீவு நாட்டின் முந்தைய அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். இதனால், அங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக இப்ராஹீம் சோலிஹ் பதவியேற்றது முதல் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
Maldives: PM Narendra Modi conferred with Maldives' highest honour accorded to foreign dignitaries, 'The Most Honourable Order of the Distinguished Rule of Nishan Izzuddeen' pic.twitter.com/PEp8vy1osn
— ANI (@ANI) June 8, 2019
மேலும், அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற உடன் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத் தீவு சென்றுள்ளார்.
இது ராஜாங்க ரீதியில் இந்தியாவுக்கு பல்வேறு அனுகூலங்களை தரும். மாலத்தீவு நாட்டில் புதிய முதலீடுகளை செய்யவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமைய இருக்கிறது. கடந்த பதவி காலத்தில் பிரதமர் மோடி செல்லாத அண்டை நாடுகளின் பட்டியலில் மாலத்தீவு இருந்தது. தற்போது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.