சீனாவின் கைப்பாவையாக மாறிய மாலத்தீவு! இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுப்பு! என்ன அது
மாலே: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான உறவில் தொடர் விரிசல் போக்கு நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு அறிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்தபோது, 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' எனும் ஒப்பந்தம், இந்தியா-மாலத்தீவு இடையே கையெழுத்தாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஆய்வு நடத்த இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்டது.

கடைசியாக 2023ம் ஆண்டு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை, இந்திய கடற்படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (எம்என்டிஎஃப்) இணைந்து மூன்றாவது முறையாக ஹைட்ரோகிராஃபிக் சர்வே நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாலத்தீவில் இஹவந்திப்பொழு, திலதன்மதி பவளப்பாறைகள் மற்றும் கல்லந்து கந்து ஆகியவற்றில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.
2019ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். 2024ம் ஆண்டுடன் ஒப்பந்தம் நிறைவடைய உள்ள நிலையில், இதனை புதுப்பிக்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் முய்ஜு அறிவித்துள்ளார். நாட்டின் நீர் நிலைகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது, தங்கள் நாட்டு கடற்படையே இந்த ஆய்வை மேற்கொள்ள மாலத்தீவு அரசு முடிவெடுத்திருக்கிறது.
ஆனால், இந்த முடிவுக்கு பின்னால் சீன ஆதரவு கொள்கை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதிபர் தேர்தலில் முய்ஜு போட்டியிட்டபோது, நான் ஆட்சிக்கு வந்தால், மாலத்தீவிற்குள் இருக்கும் இந்திய படையினரை அப்புறப்படுத்துவேன் என்று கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபராக தேர்வான பிறகு இந்திய வீரர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக முய்ஜு கூறியுள்ளார். எனவே இந்திய வீரர்கள் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஆனால் மறுபுறம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சீன ஆதரவு நிலைப்பாட்டை முய்ஜு முன்னெடுத்துள்ளார். இந்தியா கடுமையாக எதிர்த்த போதிலும், சீனாவின் உளவு கப்பலை மாலத்தீவில் நிலை நிறுத்த முய்ஜு அனுமதித்திருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக இந்தியாவுடனான உறவை துண்டிக்கும் விதமாக ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications