"போர் நிறுத்தம் அறிவிப்பு எல்லாம் சும்மா.. அவங்க பிளானே வேற.." விளாசிய மரியுபோல் மேயர்.. பரபர தகவல்!
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து உக்ரைன் மரியுபோல் நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ சாடியுள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாட்டில் போர் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. உலக நாடுகள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பலன் அளிப்பதாக இல்லை.
உக்ரைன் நகரில் உள்ள முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் போரில் அடுத்து சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இரு தரப்புக்கும் இடையே இதுவரை 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு விஷயத்திலும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதேநேரம் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி முக்கிய நகரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏதுவாக வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி மக்கள் வெளியேறிக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தற்காலிக போர் நிறுத்தம்
இருப்பினும், ரஷ்யா மக்களை நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கமும் கூட இரு நகரில் இருந்து யாரும் வெளியேறவில்லை என்றே கூறுகிறது இந்நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரின் மேயர் வாடிம் போய்ச்சென்கோ ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சாடியுள்ளார். கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் குறிப்பாகக் குடிநீர் விநியோகத்தைக் கூட ரஷ்யா நிறுத்திவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா தடுக்கிறது
இது தொடர்பாக மேயர் வாடிம் போய்ச்சென்கோ மேலும் கூறுகையில், "இங்கு நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேறும் பாதைகளில் கூட ரஷ்ய ராணுவம் தடுப்புகளை அமைத்துள்ளது. ரஷ்யா இங்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கியுள்ள. அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் வருவதைக் கூட ரஷ்ய ராணுவம் தடுக்கிறது.

அத்தியாவசிய சேவைகள்
இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 5 நாட்களாக நாங்கள் மின்சாரம் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் கடும் குளிரால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், மொபைல் நெட்வொர்க் சேவையும் நகரில் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி, நகரின் குடிநீர் இணைப்பையும் விநியோகத்தையும் கூட நாங்கள் இழந்துள்ளோம்.. இதன் காரணமாக நகரில் உள்ள அனைத்து மக்களும் தண்ணீரின்றி தவிக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்களைக் கூட மீட்க விடாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ரஷ்யா திட்டம்
எங்கள் நகரத்திற்கு வரும் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறுத்தி, நகரை முடங்கச் செய்வதே அவர்களது திட்டம். கடந்த சில நாட்களில் மட்டும் பலர் காயமடைந்து மற்றும் உயிரிழந்துள்ளனர், வரும் நாட்களில் இது மேலும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது. ஆபத்தில் உள்ள உக்ரைன் மக்களைக் காப்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், எங்களை ஆபத்தில் தள்ளுவதே அவர்கள் தான். இந்த இக்கட்டான நேரத்திலும் தொடர்ந்து சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பேருந்துகள்
மக்களை இங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற 50 பேருந்துகளைத் தயார் நிலையில் வைத்திருந்தோம். இருப்பினும், தாக்குதலில் 20 பேருந்துகளை அழித்துவிட்டனர். மீதமிருந்த 30 பேருந்துகளைக் காக்க வேறு இடத்தில் மறைத்து வைத்தோம். இருப்பினும், அங்கும் ஏவுகணை தாக்குதலில் மேலும் 10 பேருந்துகளை நாங்கள் இழந்தோம். கடைசியாக வழி செல்ல பாதை கிடைத்தாலும் பத்திரமாகச் செல்ல பேருந்துகள் கூட இருக்குமா என தெரியவில்லை.

பொய் பிரசாரம்
ரஷ்யா தொடர்ச்சியாகப் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகிறது. நான் ஆயிரமாவது முறையாக மீண்டும் சொல்கிறேன், அவர்கள் எங்கள் தேசத்தையே அழிக்கின்றனர். எங்களுக்கு மன உறுதி அதிகம். ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நாட்டின் முக்கிய நகராக இருந்த மரியுபோல் நகரத்தை இல்லாத ஒரு நகரமாக அவர்கள் மாற்றிவிட்டனர்" என்று அவர் வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications