டிரம்ப்பை மதிக்காத இஸ்ரேல்? போரை நிறுத்துவதாக அமெரிக்கா சொல்லிய பிறகும் ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு
தோஹா: வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்த நிலையில், இந்த போர் முடிவுக்கு வருவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மத்திய கிழக்கில் ஒரு வழியாக அமைதி திரும்பிவிடும் எனப் பலரும் நிம்மதி அடைந்தனர். ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே பரஸ்பர ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த மோதலில் ஈரானின் சுப்ரீம் லீடராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து சீக்கிரமே மோதல் முடிவுக்கு வந்துவிடும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சரணடையாமல் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் மோதல் தொடர்ந்து.

வளைகுடா போர்
இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் உலக நாடுகளைப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு பிரஷர் போட்டன. இந்தச் சூழலில் தான் அடுத்த இரு வாரங்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும் போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அமெரிக்கா இன்று அறிவித்தது.
இருப்பினும், அறிவிப்பு வந்தாலும் தாக்குதல் தொடர்வதாகவே கூறப்படுகிறது. அதாவது மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே பரஸ்பர ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பல நாடுகளில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தொடரும் தாக்குதல்கள்
இஸ்ரேல் இன்னுமே கூட ஈரான் மீது தாக்குதலைத் தொடர்வதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய பிறகும் இஸ்ரேல் தாக்குதலை நடத்துவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் தாக்குதல்கள் பதிவாகின. அங்குள்ள பிபிசி செய்தியாளர்கள் பல வெடிப்புகளைக் கேட்டதாகவும், குண்டு வெடிப்புகளை உணர முடிந்ததாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்களுக்கு அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஐக்கிய அமீரகம்
ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகமும் தாக்குதல் நடப்பதை உறுதி செய்துள்ளது. ஈரானில் இருந்து வரும் ஏவுகணை தாக்குதல்களையும், டிரோன்களையும் தங்கள் நாடு சமாளித்து வருவதாக அமீரகம் தெரிவித்துள்ளது.. பஹ்ரைனிலும் ஏவுகணை தாக்குதல்களால் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியதாக என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்து..
அதேபோல கத்தாரை நோக்கி வந்த ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த சில மணிநேரங்களில் மட்டும் குறைந்தது இரண்டு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ரியாதில் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்தின் பதிவுகளின்படி, முதல் எச்சரிக்கைக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.












Click it and Unblock the Notifications