இஸ்ரேலை காலி செய்ய திட்டம் போடும் ஈரான்? வெடிக்கும் உலக போர்? தூரமாக நிற்கும் அமெரிக்கா சொல்வது என்ன
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், அங்கே முழு வீச்சில் போர் வெடிக்கும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய ஒரு போர் உருவாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், மற்ற பகுதிகளில் ஏற்படும் சூழல்களையும் சமாளிக்கத் தயாராகி இஸ்ரேல் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது. இதைத் தான் மறைமுகமாக இஸ்ரேல் குறிப்பிட்டுப் பேசியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரான் ஜெனரல் உட்பட பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தவிர்க்க முடியாது என்று ஈரானிய சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது. என்ன தான் ஈரான் இவ்வளவு ஆவேசமாக இருந்தாலும், அந்தத் தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று இஸ்ரேல் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காசாவில் எங்கள் நாடு ராணுவ நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அதேநேரம் மற்ற பகுதிகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் ரெடியாக இருக்கிறோம். எதிரிகள் தாக்குதலைச் சமாளிப்பது திரும்பத் தாக்குவது என இரண்டிலும் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்" என்றார்.
பதற்றம்: இப்படி இஸ்ரேலைச் சுற்றி பதற்றமான ஒரு சூழல் நிலவும் நிலையில், ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம், ஏப்ரல் 13ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமானச் சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. வேறு சில விமான நிறுவனங்களும் விமான டைமிங்கை மாற்றி அமைப்பது அல்லது மொத்தமாக விமானச் சேவையை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் ஈரான் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மத்திய கிழக்குப் பகுதியில் நிலைமை மோசமாவதை அனுமதிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யா அலர்ட்: ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் தங்கள் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குறிப்பாக இஸ்ரேல், லெபனான் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த பிராந்தியத்தின் அமைதி சீர்குலையும் என்றும் எச்சரித்து இருக்கிறது.
வார்னிங்: இஸ்ரேல் மீது ஈரான் பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவும் எச்சரிக்கிறது. இந்தத் தாக்குதல் நடக்குமா என்பது கேள்வி இல்லை.. எப்போது நடக்கும் என்பது மட்டுமே கேள்வி என்று கூறியுள்ள அமெரிக்க அதிகாரிகள், வரும் நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications