அழுது தொல்லைக் கொடுத்த குழந்தையை ஏலமிட்ட பிரேசில் தாய் தலைமறைவு
பிரேசிலியா: தூங்க விடாமல் அழுது தொல்லைக் கொடுத்ததாக குழந்தையை ஏலம் விட முயன்ற தாயை பிரேசில் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகத்தையே கைக்குள் கொண்டுவந்து விட்ட பெருமைக்குரிய இணையம், பொருட்களை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பல நவீன வசதிகளைச் செய்து தருகிறது. அதனை ஆக்க வகையில் பயன் படுத்துபவர்களும் இருக்கிறார்கள், அழிவுக்காக பயன் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிரேசில் நாட்டுத் தாய் ஒருவர் தனது குழந்தையை இணையம் மூலம் ஏலம் விட முயன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏலம்...
பிரேசில் நாட்டில் சமீபத்தில் தனது குழந்தையை ஏலம் விடப் போவதாக விளம்பரம் விட்டார் பெண் ஒருவர். அதற்கான காரணமாக, அக்குழந்தை தன்னை தூங்க விடாமல், வேலைக்குச் செல்ல விடாமல் சதா அழுது கொண்டே இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
விதிமீறல்...
குழந்தையின் படத்தோடு விலை ரூ 27 ஆயிரம் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. வர்த்தக விதிகளை மீறிய செயல் என்பதை உணர்ந்த இணைய தள நிர்வாகிகள் இந்த விளம்பரத்தை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் அகற்றி விட்டனர்.
புகார்....
ஆனபோதும், விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கும், குழந்தைகள் நல அமைப்பிற்கும் இது குறித்து புகார் அளித்தனர்.
தலைமறைவு...
உடனடியாக செயலில் இறங்கிய போலீசார், விளம்பரத்தில் கூறப்பட்டிருந்த முகவரிக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் சுதாரித்துக் கொண்ட அப்பெண், தொலைபேசியை அணைத்து வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
தேடுதல் வேட்டை....
யார் அந்த கோடூரமான தாய் என தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.