பற்றி எரியும் நேபாளம்.. ஒரே நாளில் உச்சத்திற்கு போன வன்முறை.. வேறு வழியின்றி சமூக வலைத்தள தடை வாபஸ்!
காத்மாண்டு: நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு விதித்த தடையை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இளம் தலைமுறையினரே மிகப் பெரியளவில் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர். இதில் திடீரென மோதல் வெடித்த நிலையில், 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிலைமை மோசமாக இருப்பதால் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பவுர்புல்லான ஒரு விஷயமாக மாறிவிட்டது. சிறிய விஷயங்களையும் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடையே பெரிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. அதேநேரம் இதையே வைத்து தவறான செய்திகளையும் பொய் தகவல்களையும் கூட பலரும் பரப்ப முயல்கிறார்கள். இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகளும் சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பின்னணி
அதன்படி நமது அண்டை நாடான நேபாளம் சமூக வலைத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது அந்நாட்டில் இயங்கும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தங்கள் நாட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இருப்பினும், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தளங்களும் நேபாளத்தில் பதிவு செய்ய முடியாது எனக் கூறிவிட்டது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே நேபாள அரசு இதை வலியுறுத்தி வந்த போதிலும், 26 சமூக வலைத்தள நிறுவனங்கள் நேபாளத்தில் தங்களைப் பதிவு செய்யவில்லை.
தடை விதித்த நேபாளம்
இதன் காரணமாக இந்த தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த தடை அமலுக்கு வந்ததது. இருப்பினும், இதற்கு எதிராகப் பொதுமக்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். முதலில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்த இவர்கள், பிறகு சாலையில் இறங்கியும் போராட்டம் செய்தனர்.
மிக மோசமான வன்முறை
பல ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்றைய தினம் நேபாள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு மிகப் பெரிய போராட்டம் நடந்தது. அப்போது சிலர் நாடாளுமன்ற வளாகத்திலும் நுழைய முயன்றனர். இதனால் அங்கு மிக பெரிய வன்முறை ஏற்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமை கையை மீறிப் போன சூழலில், இதற்குப் பொறுப்பேற்று நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.
முடிவை மாற்றிய நேபாள அரசு
இதற்கிடையே சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது. இளைஞர்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள அரசு இந்த முடிவை எடுத்தது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அறிவித்தார். ஜென் இசட் தலைமுறையினரின் கோரிக்கையை ஏற்றுத் தடை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இதனால் ஜென் இசட் குழுவினர் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் குருங் கேட்டுக்கொண்டார். மேலும், நேற்று நடந்த வன்முறை குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வன்முறைக்கான காரணத்தைக் கண்டறிந்து அடுத்த 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications