ஆஸ்திரேலியாவில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலி - "தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை" தொடக்கம்!!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலியாக "தாயகம் தமிழ் ஒலிபுரப்பு' சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிட்னியில் கடந்த 16-ந் தேதியன்று தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தொடக்க விழா நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் விஜய் இராஜகோபால் எனும் தமிழ் இளைஞர் இந்த வானொலியைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் வானொலி அறிவிப்பாளர்களில் மிகவும் மூத்தவரான எஸ்.எழில்வேந்தன் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இந்த வானொலியில் பொறுப்பேற்றுள்ளார். அவரோடு 15-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்களும் இணைந்துள்ளனர்.
இந்த வானொலியில் வணக்கம் வையகம் என்ற நிகழ்ச்சி
கனடா நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரைக்கும்,
ஐரோப்பிய நேரம் இரவு 11 மணி முதல் 1 மணி வரைக்கும்,
அன்றாட செய்திகள்
கனடா நேரம் காலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரம் பிற்பகல் 12 மணிக்கும்,
இலங்கை-இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கும்,
சமகால அரசியல் பார்வை தொடர்பான "சதுரங்கம்" நிகழ்ச்சி
கனடா நேரம் காலை 7 மணி முதல் 9 மணி வரைக்கும்,
ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரைக்கும்
இலங்கை-இந்திய நேரம் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரைக்கும் ஒலிபரப்பாகிறது.
ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் தங்களது வானொலி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் நிறுவனர் விஜய் ராஜகோபால்.
இதன் தொடக்க விழாவில் சிட்னி வாழ் தமிழ் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நேயர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, ஆஸ்திரேலிய தேசிய கீதம், நடனம், பாடல்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த வானொலிச் சேவையினை www.thayagam.net இணைய தளம் வாயிலாக தற்போது கேட்கலாம். Android apps, Tunein radio apps, Apple apps மூலமாகவும் விரைவில் கேட்கலாம் என்று வானொலி நிர்வாகத்தின் தெரிவித்துள்ளனர்.