கொரோனாவை வென்ற நியூசிலாந்து.. பள்ளிகள் திறப்பு.. கடற்கரையில் ஸ்விம் பண்ணலாம்.. அசத்திய ஜசிந்தா
வெலிங்டன்: கொரோனா வைரசை, தங்கள் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக அகற்றிவிட்டதாக அறிவித்துள்ளது நியூசிலாந்து. பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எடுத்த திடமான நடவடிக்கைகள் அந்த நாட்டை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது.
Recommended Video
நியூசிலாந்து நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேற்று அறிவித்தது. புதிய கொரோனா கேஸ்கள், ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் நேற்று கொரோனா நோயாளிகள் வெறும் 4 என்ற அளவுக்குத்தான் பதிவாகியிருந்தனர்.

பரவல் இடம்
சுகாதார துறை, இயக்குநர் ஜெனரல், ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் இதுபற்றி கூறுகையில், எங்கள் இலக்கை நாங்கள் அடைந்துவிட்டோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது, இது பூஜ்ஜியம் என்ற அளவுக்கு செல்லவில்லை. ஆனால் கேஸ்கள் எங்கிருந்து வருகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். எனவே பூஜ்யமாக்குவது பெரிய விஷயமில்லை, என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஜசிந்தா
எங்கள் குறிக்கோள் முழுமையாக வைரஸ் பாதிப்பை நீக்குதல் என்று ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் மேலும் தெரிவித்தார். நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கொரோனா வைரஸ் தற்போது அகற்றப்பட்டுவிட்டது. ஆனால் நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் புதிய கேஸ்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

வெற்றி
கடந்த சில நாட்களில், கேஸ்கள் ஒற்றை இலக்கங்களில் இருந்தன, தொற்றுநோய் தாக்கத்தால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நியூசிலாந்து மக்களின் ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது. கிட்டத்தட்ட 5 வாரங்கள் பொது முடக்கத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதை வெற்றிபெறச் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளிகள்
நியூசிலாந்தில், இன்று முதல் 3வது லெவல் என்ற லாக்டவுன் நடைமுறைக்கு வருகிறது. வணிக நிறுவனங்கள் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படும். பள்ளிகள் குறைந்த ஊழியர்களுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளது. உற்பத்தி துறை மற்றும் வனம் சார்ந்த துறைகளில் பணிகள் மீண்டும் தொடங்கும், இருப்பினும் வீட்டிலிருந்து வேலை செய்ய மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடற்கரை
மக்கள் டேக்அவே முறையில், அதாவது பார்சல் மூலம், ரெஸ்டாரண்டுகளில் உணவை வாங்க முடியும். மேலும் கடற்கரையில் நீச்சல் உள்ளிட்ட குறைந்த நெருக்கம் கொண்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும். திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு 10 பேர் வரை கூட அனுமதிக்கப்புடகிறது. பொது இடங்களான நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஜிம்கள் மே 11 வரை மூடப்பட்டிருக்கும். பிறகு, அவற்றை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவிப்புபடி, நியூசிலாந்தில் இதுவரை மொத்தம் 1,469 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன. 19 பேர் அங்கு, கொரோனாவால் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications